முன்னாள் வீரர்கள் கருத்து
தொடர் வெற்றிகளை பெற்றபோதிலும் பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. அணியின் இந்த செயல்பாடுகள் குறித்து ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் பல கருத்துகளை முன் வைத்து வருகின்றனர்,
அணியின் கட்டமைப்பு
உள்நாட்டு கிரிக்கெட்டை வலுப்படுத்தி திறமையான, இளம் வீரர்களை அணியில் சேர்த்து கட்டமைக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. உலக கோப்பையில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினாலும், பேட்ஸ்மேன்கள் தான் சொதப்பினர்.
வலுவான அணி
சோயப் மாலிக்கை நீக்கிவிட்டு ஹாரிஸ் சோகைல் அணியில் சேர்க்கப்பட்ட பிறகு, அவர் சிறப்பாக ஆடியதால் கடைசி 4 லீக் போட்டிகளில் பாக். வென்றது. பாகிஸ்தான் அணி சில அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வலுவான மற்றும் தரமான அணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இம்ரான் கான் வலியுறுத்தல்
கேப்டன் சர்பிராசை மாற்ற வேண்டும் என்று முன்னாள் வீரர் அக்தர் தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் அணியை வலுவாக்க வேண்டிய கட்டாயம் இருப்பதை உணர்ந்த முன்னாள் கேப்டனும் தற்போதைய பிரதமருமான இம்ரான் கான், அவரே களத்தில் இறங்கி அணியை கட்டமைக்க இருப்பதை அண்மையில் உறுதிப்படுத்தினார்.
அணியின் உருவாக்கம்
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஜாகீர் அப்பாஸ், பாகிஸ்தான் அணியை சிறந்த அணியாக உருவாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது:
அதிக முக்கியத்துவம்
பாகிஸ்தான் அணிக்கு நிரந்தரமான ஒரு துணை கேப்டனை நியமித்து, அடுத்த கேப்டன் பதவிக்கு அவரை உருவாக்குவது அவசியம். டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
சீர்திருத்த நடவடிக்கை
டெஸ்ட் போட்டிகளின் வாயிலாக தலைசிறந்த வீரர்களை உருவாக்க வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டில் சீர்திருத்த நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்ளது என்றார்.