அபுதாபி: ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில், 'முடியலடா அடங்கப்பா" என்று அந்த அணியின் பேட்ஸ்மேன்களை புலம்ப வைத்தவர் வருண் சக்கரவர்த்தி.
ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதி போட்டிகள் அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.
இதில், பெங்களூரு அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றிப் பெற்றது.
பெங்களூரு அணியில் கோலி - தேவ்தத் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், தொடக்கத்திலேயே கோலியின் விக்கெட்டை இழந்தது பெங்களூரு. அவர் பிரசித் கிருஷ்ணா ஓவரில் 5 ரன்களில் வெளியேறினார். பிறகு ஃபெர்கியூசன் ஓவரில், தேவ்தத் படிக்கல் 22 ரன்களில் வெளியேற, ரஸல் ஓவரில் பெங்களூரு அணியில் அறிமுகமான இளம் வீரர் ஸ்ரீகர் பரத் 16 ரன்களில் அவுட்டானார். இவர்கள் இருவரும் தான் அந்த அணியின் டாப் ஸ்கோரர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு, ரஸல் வீசிய அபாரமான யார்க்கர் பந்தில் முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி வெளியேறினா டி வில்லியர்ஸ்
இதன் பிறகு, "மிஸ்ட்ரி ஸ்பின்னர்" வருண் சக்கரவர்த்தி ஆர்சிபி அணியின் மிடில் மற்றும் லோ ஆர்டரை மொத்தமாக சீர்குலைத்தார். வருண் ஓவரில் மேக்ஸ்வெல் 10 ரன்களில் போல்டாகி வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய இலங்கை வீரர் வனிந்து ஹஸரங்கா அடுத்த பந்திலேயே எல்பி ஆகி வெளியேறினார். பிறகு, ஹாட்ரிக் விக்கெட் வருணுக்கு ஜஸ்ட் மிஸ்ஸானது. இதையடுத்து, வருண் சக்கரவர்த்தி ஓவரில் சச்சின் பேபி 7 ரன்களில் கேட்ச் ஆனார். தொடர்ந்து, வருண் ஓவரில் கைலே ஜெமிசன் 4 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ரன் அவுட் செய்ததும் வருண் தான். இப்படி பெங்களூரு அணியை மொத்தமாக சீர்குலைத்தார். இறுதியில், பெங்களூரு அணி 19வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட்டானது. கொல்கத்தா தரப்பில் வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்கள் வீசி, 13 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், ஆந்த்ரே ரஸல் 3 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டும் கொடுத்து, 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
உலகக் கோப்பை டி20 தொடர் அடுத்த மாதம் இதே அமீரகத்தில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டிருந்தார். நேற்றைய போட்டியில் அவர் பந்து வீசிய விதம், அவர் அணியில் சேர்க்கப்பட்டதற்கு நியாயம் கற்பித்தது. அவரது பந்துவீச்சு உண்மையில் மிரள வைத்தது. எந்த பேட்ஸ்மேனாலும் அவரது சுழற்பந்து வீச்சை அடித்து ஆட முடியவில்லை. மேக்ஸ்வெல் ஒருகட்டத்தில் விரக்தியாகி கண்களை மூடிக் கொண்டு சுற்ற, ஸ்டெம்ப்புகளை பறிகொடுத்தார். அவரது பந்து எங்கு லேண்ட் ஆகிறது என்பது பேட்ஸ்மேன்களுக்கு தெளிவாக தெரிகிறது. ஆனால், பிட்ச் ஆகி எந்த திசையில் வரும் என்பதைத் தான் அவர்களால் கணிக்க முடியவில்லை.
இந்த நிலையில், தோல்வி அடைந்தாலும் விராட் கோலி திருப்தி அடைந்த ஒரே விஷயம், வருண் சக்கரவர்த்தியின் அபார பவுலிங்கை நினைத்து தான். இதனை, ஓப்பனாகவே நேற்று போட்டி முடிந்த பிறகு பேசிவிட்டார் கோலி. வருண் குறித்து அவர் பேசுகையில், "வருணின் ஆட்டம் அருமையாக இருந்தது. dug-out-ல் உட்கார்ந்து நான் சொல்லிக் கொண்டிருந்தது இதுதான், "இந்தியாவுக்காக விளையாடும்போது அவர் ஒரு முக்கிய வீரராக இருப்பார்" என்றேன். இந்திய கிரிக்கெட்டின் பெஞ்ச் வலிமை வலுவாக இருக்க அனைத்து இளைஞர்களிடமிருந்தும் இதுபோன்ற அபார திறமையை நாம் பார்க்க வேண்டும். மேலும், அவர் எதிர்காலத்தில் இந்தியாவுக்காக விளையாடப் போகிறார், அவரது இந்த செயல்பாடு அதற்கு ஒரு பெரிய அறிகுறியாகும்" என்றார்.
இந்நிலையில், வருண் சக்கரவர்த்தி குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், தமிழகத்தைச் சேர்ந்த டாப் கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான சடகோபன் ரமேஷிடம் தமிழ் மைக்கேல் தளம் சார்பாக பேசினோம். அவரிடம் வருண் சக்கரவர்த்தி பவுலிங்கில் உள்ள ப்ளஸ் மற்றும் மைனஸ் குறித்து கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர், "வருண் சக்கரவர்த்தி நிச்சயம் இந்திய அணியின் சொத்து என்பதில் சந்தேகமில்லை. அவரது பவுலிங்கில், பெங்களூரு வீரர்கள் எப்படி திணறினார்கள் என்பதை நாம் கண்கூடாக பார்த்தோம். உலகக் கோப்பை டி20 தொடரில், அவர் நிச்சயம் தாக்கம் ஏற்படுத்துவார் என்பது உறுதி. அவரது வெரைட்டி பவுலிங் எதிரணி வீரர்களுக்கு சவாலாக இருக்கும்.
அதேசமயம், நான் அவரது பவுலிங்கில் எந்த மைனஸும் பார்க்கவில்லை. அவர் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் போது நாம் ஏன் அவரது மைனஸ் பற்றி பேச வேண்டும்? அவர் கொல்கத்தா அணியில் இருப்பது அந்த அணிக்கு ப்ளஸ். அவர் கொல்கத்தா அணியில் இருப்பது மற்ற அணிகளுக்கு மைனஸ். இவர் போன்ற இளைஞர்களை நாம் எப்போது ஊக்குவித்துக் கொண்டே இருக்க வேண்டும்" என்று நறுக்கென சொல்லி முடித்தார்.