இங்கிலாந்து கிரிக்கெட்
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே இங்கிலாந்து அணி கிரிக்கெட் போட்டிகளை துவக்கி உள்ளது. தங்கள் நாட்டிற்கு ஒவ்வொரு அணியாக அழைத்து கிரிக்கெட் தொடர்களை நடத்தி வருகிறது. அதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் ஒன்று.
பாகிஸ்தான் தொடர்
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட் தொடரில் ஆடி வரும் இங்கிலாந்து, ஆகஸ்ட் 5 முதல் பாகிஸ்தான் அணியுடன் டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. அதற்காக பாகிஸ்தான் அணி கடந்த மாத இறுதியில் இங்கிலாந்து கிளம்பிச் சென்றது.
பயிற்சி
பாகிஸ்தான் அணி வீரர்கள் சிலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, பின் மீண்டு ஒரு வழியாக பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்றடைந்தது. பாகிஸ்தான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கே பயிற்சி செய்ய முடியாத நிலையில் பாகிஸ்தான் அணி முன்னதாகவே இங்கிலாந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெற்றி வாய்ப்பு
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து முன்னாள் வீரர் சயீத் அஜ்மல் பேசினார். அவர் கூறுகையில், தற்போதைய அணியில் இளம் வீரர்கள் அதிகம் இருப்பதாக குறிப்பிட்டார். தற்போதைய அணி வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.
கடினம்
"தற்போது இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணியில் அதிக அளவில் இளம் வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு இந்த இங்கிலாந்து தொடர் மிகக் கடினமானதாக இருக்கும்" என்று குறிப்பிட்டார் சயீத் அஜ்மல். அடுத்து அணியின் வெற்றி வாய்ப்பு பற்றி பேசினார்.
பெரிய அதிசயம்
"பாகிஸ்தான் அணி தொடரை வெல்ல எந்த வாய்ப்பும் இல்லை. பாகிஸ்தான் அணி ஒரு போட்டியை வென்றால் கூட அது பெரிய அதிசயம். ஒரு பாகிஸ்தானியராக தேசிய அணி இந்த தொடரில் சிறப்பாக ஆட வேண்டிக் கொள்கிறேன்" என கூறி உள்ளார்.
இப்படி சொல்வார்களா?
சயீத் அஜ்மலின் பேச்சு பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கி உள்ளது. எந்த முன்னாள் கிரிக்கெட் வீரராவது தங்கள் அணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என கூறுவார்களா? என கேள்வி எழுப்பி உள்ளனர் சிலர்.
சமன் செய்தது
பாகிஸ்தான் அணி கடந்த ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியை அந்த சொந்த மண்ணில் சமன் செய்து இருந்தது. இந்த நிலையில் சயீத் அஜ்மல் இப்படி கூறி இருக்கிறார். அவரது பேச்சை சிலர் ஆதரித்தும் உள்ளனர்.