சூர்யகுமார் யாதவ் அதிரடி
இந்திய அணியின் ஓப்பனிங் மற்றும் ஃபினிஷிங் பகுதிகள் சிறப்பாக செயல்பட்டு வரும் சூழலில் நீண்ட நாட்களாக இருந்த மிடில் ஆர்டர் பிரச்சினையை சூர்யகுமார் யாதவ் தீர்த்துள்ளார். காயத்திற்கு பின்பு சிறப்பாக விளையாடமுடியாமல் இருந்த சூர்யகுமார், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தரமான கம்பேக் கொடுத்துள்ளார். இனி அவரை நிறுத்த முடியாது என்பது போன்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
பாண்டிங் புகழாரம்
அந்தவகையில் ஆஸி, ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் சூர்யகுமார் யாதவ் இந்தியாவின் ஏ பி.டிவில்லியர்ஸ் என புகழ்ந்து கூறினார். இதுகுறித்து பேசிய அவர், ஏபி டிவிலியர்ஸ் எப்படி அனைத்து பக்கங்களிலும் பந்துகளிலும் அதிரடி காட்டுவாரோ, அதேபோல தற்போது சூர்யகுமார் யாதவும் 360 டிகிரியில் விளையாடி வருகிறார். சூர்யகுமார் யாதவின் சில ஷாட்கள் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு என அனைத்தையும் அதிரடியாக எதிர்கொண்டு ஆடும் திறமை அவரிடம் உள்ளது என பாராட்டினார்.
பாக். சீனியர் அதிருப்தி
இந்நிலையில் பாண்டிங்கின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதில், டிவில்லியர்ஸை போன்று தற்போது எந்தவொரு வீரரும் விளையாடுவதாக எனக்கு தெரியவில்லை. அவரை அவுட் செய்யவில்லையெனில் நம்மால் வெற்றிபெற முடியாது என்று எதிரணியினர் பயப்படும் அளவுக்கு கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்.
நியாயம் இல்லை
ஆனால் சூர்யகுமார் யாதவ் தற்போது தான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தொடங்கியுள்ளார். நல்ல திறமையுடன் விளையாடுகிறார் என்பதற்காக நேரடியாக ஏ.பி.டிவில்லியர்ஸுடன் ஒப்பிடுவதா? ரிக்கி பாண்டிங் சற்று காலம் பொறுமை காக்க வேண்டும். சூர்யகுமார் யாதவ் இன்னும் ஐசிசி போன்ற பெரும் தொடர்களை சமாளிக்கவில்லை. தற்போது அவர் ஆடுவதை வைத்து விவி ரிச்சர்ட்ஸ் உடன் வேண்டுமேனால் ஒப்பிட்டிருக்கலாம் எனக் கூறியுள்ளார்.