நவம்பர் 21ல் துவக்கம்
ஐபிஎல்லின் சிறப்பான வெற்றியை தொடர்ந்து சில நாடுகளில் உள்ளூர் பீரிமியர் லீக் போட்டிகள் துவங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் லங்கா பிரீமியர் லீக் தொடர் செப்டம்பர் மாதத்திலேயே திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது அந்த தொடர் அடுத்த மாதம் 21ம் தேதி முதல் டிசம்பர் 13ம் தேதிவரை திட்டமிடப்பட்டுள்ளது.
கண்டி அணியை வாங்கிய சல்மான் குடும்பம்
இந்த தொடரில் கொழும்பு கிங்ஸ், தம்புலா ஹாக்ஸ், கல்லே கிளாடியேட்டர்ஸ், ஜாப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் என 5 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இந்நிலையில் கண்டி டஸ்கர்ஸ் அணியை பாலிவுட் நடிகர் சல்மான் கானின் குடும்பத்தினர் தற்போது வாங்கியுள்ளனர்.
சோஹேய்ல் கான் மகிழ்ச்சி
சல்மான் கானின் இளைய சகோதரர் சோஹேய்ல் கான் மற்றும் அவருடைய தந்தை சலிம் கான் இணைந்து இந்த அணியை வாங்கியுள்ளனர். இந்த அணியின் குசால் பெராரா, கிறிஸ் கெயில், லியாம் பிளங்கெட், வஹாப் ரியாஸ் மற்றும் குஷால் மென்டிஸ் ஆகிய முக்கிய வீரர்கள் இடம் பெற்றுள்ளதாக சோஹேய்ல் கான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சிறப்பாக உருவாக்கம்
கண்டி டஸ்கர்ஸ் அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளிலும் சல்மான் கான் பங்கேற்பார் என்று தெரிவித்துள்ள சோஹேய்ல் கான், மிகவும் சிறப்பான அணி கண்டி டஸ்கர்ஸ் என்று புகழ்ந்துள்ளார். கடந்த 48 மணிநேரத்தில் அணியில் இருந்த பல்வேறு குழப்பங்கள் சரிசெய்யப்பட்டு தற்போது சிறந்த அணியாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.