சிஎஸ்கே வீரர் குர்ரான்
நடந்து முடிந்துள்ள ஐபிஎல் 2020 சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் குர்ரான். அணியின் குறைந்த வயது வீரராக துறுதுறுவென வலம்வந்து அனைவரையும் கவர்ந்தார் குர்ரான். மேலும் இவரை துவக்க ஆட்டக்காரர், கேம் பினிஷர் என பல இடங்களில் பயன்படுத்தினார் கேப்டன் எம்எஸ் தோனி.
அதிக விக்கெட்டுகள்
அதற்கேற்ப அவரது நம்பிக்கையை பொய்யாக்காமல் தனது திறமையை குர்ரான் வெளிப்படுத்தினார். 23 சராசரியாக கொண்டு ரன்களை எடுத்த அவர், 13 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி அணியின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பௌலர் என்ற பெருமையையும் பெற்றார்.
28 ரன்கள்... 3 விக்கெட்டுகள்
தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இங்கிலாந்து அணியின் டி20 தொடரில் இடம்பெற்றுள்ளார் குர்ரான். இந்த தொடரின் முதல் போட்டியில் 28 ரன்களை கொடுத்து இவர் எடுத்த 3 விக்கெட்டுகள் அணியின் வெற்றியை உறுதி செய்துள்ளது. இரண்டாவது போட்டியிலும் குர்ரான் சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்ற உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேம்பட்டுள்ள விளையாட்டு
இந்நிலையில் ஐபிஎல் 2020 சீசனில் சிஎஸ்கேவிற்காக விளையாடியது தன்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக குர்ரான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தன்னுடைய விளையாட்டு மேம்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதன் காரணமாகவே தற்போது இங்கிலாந்து அணியில் தான் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதிக கவனத்தை பெற்ற குர்ரான்
சிஎஸ்கேவின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கொடுத்த ஊக்கம் மற்றும் ஆலோசனைகள் தன்னை வேறு லெவலிற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் கூறினார். சிஎஸ்கேவின் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சாம் குர்ரான் ஐபிஎல் 2020 சீசனில் தங்களது திறமையை வெளிப்படுத்தி அதிக கவனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.