தடுப்புச் சுவர்
ராகுல் டிராவிட் பெயரை சொன்னால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாது, உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் இடையே கூட ஒரு மரியாதை ஏற்படும். டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் விழாமல் அவர் ஆடிய ஆட்டத்தால் இந்திய அணியின் தடுப்புச் சுவர் என அழைக்கப்பட்டார்.
டிராவிட் மகன் சமித்
டிராவிட் கிரிக்கெட்டில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற நிலையில், அவரது மகன் சமித் டிராவிட் பள்ளிகள் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் இப்போதே முத்திரை பதித்து வருகிறார். சமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டி ஒன்றில் விரைவாக இரட்டை சதம் விளாசி இருக்கிறார்.
உள்ளூர் போட்டி
பெங்களூருவில் நடைபெற்று வரும் பிடிஆர் ஷீல்டு அண்டர் 14 குரூப் 1, டிவிசன் 2 தொடரில் மால்யா அதிதி சர்வதேச பள்ளி அணியும், ஸ்ரீ குமரன் சில்ட்ரன் அகாடமி அணியும் மோதின. இந்தப் போட்டியில் சமித் டிராவிட் மால்யா அதிதி பள்ளி அணியில் ஆடினார்.
இரட்டை சதம்
இந்த 50 ஓவர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மால்யா அதிதி பள்ளி அணியில், சமித் டிராவிட் அசத்தல் ஆட்டம் ஆடி ரன் குவித்தார். 146 பந்துகளில் இரட்டை சதம் கடந்தார். 204 ரன்கள் குவித்தார். அவரது அதிரடி ஆட்டத்தில் 33 பவுண்டரிகள் அடங்கும்.
சமித் அணி வெற்றி
50 ஓவர் முடிவில் மால்யா அதிதி பள்ளி அணி 377 ரன்கள் குவித்து 3 விக்கெட்கள் மட்டுமே இழந்து இருந்தது. அடுத்து ஆடிய ஸ்ரீ குமரன் அணி 110 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து 267 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்தது.
ஆல் - ரவுண்டர்
சமித் டிராவிட் வெறும் பேட்ஸ்மேன் மட்டும் அல்ல. பகுதி நேர பந்துவீச்சாளரும் கூட. இந்தப் போட்டியில் அவர் 2 பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்தியும் அணிக்கு உதவி இருக்கிறார். அவரது ஆல்-ரவுண்டர் ஆட்டம் பெங்களூர் கிரிக்கெட் வட்டாரங்களில் இப்போதே பரவி வருகிறது.
முந்தைய இரட்டை சதம்
கடந்த 2019 டிசம்பர் மாதத்திலும் சமித் ஒரு இரட்டை சதம் அடித்து இருந்தார். அப்போது ஒரு உள்ளூர் போட்டி ஒன்றில் 2565 பந்துகளில் இரட்டை சதம் அடித்து இருந்தார். அந்தப் போட்டியில் அவர் மூன்று விக்கெட்களும் வீழ்த்தினார்.
மூன்று அரைசதம்
இப்போது மட்டும் அல்ல, 2015இல் சமித் பேட்டிங்கில் கலக்கி இருக்கிறார். அப்போது அண்டர் 12 தொடரில் ஆடிய அவர் மூன்று அரைசதங்கள் அடித்து இருந்தார். அதன் மூலம், தன் அணியை அந்த மூன்று போட்டிகளிலும் வெல்ல வைத்தார்.
டிராவிட் சாதனை
இந்திய அணியில் ராகுல் டிராவிட் டெஸ்ட் அணியில் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன் ஆக களமிறங்கி பல போட்டிகளில் இந்திய அணிக்கு தூணாக விளங்கி இருக்கிறார். அவரைப் போன்ற ஒரு வீரர் உலக கிரிக்கெட்டில் இல்லை என்ற நிலை தான் உள்ளது.
டிராவிட் வழியில்..
இந்த நிலையில், டிராவிட் மகன் சத்தமே இல்லாமல் தன் தந்தையின் வழியில், வளர்ந்து வருகிறார். பேட்டிங் மட்டுமில்லாமல், பந்துவீச்சிலும் அவர் கலக்கி வருவதால், இன்னும் சில ஆண்டுகளில் அவர் இந்திய அணியில் இடம் பிடித்தாலும் ஆச்சரியம் இல்லை.