சந்தீப் பாட்டில் கருத்து இதுதான்
சந்தீப் பாட்டில் கூறுகையில், "தற்போது வீரர்கள் ஐபிஎல்-இல் ஆடுவதற்காக தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள். இப்போது (உள்ளூர் கிரிக்கெட்) சீசன் முடிந்து விட்டது. இப்போது ஆஸ்திரேலிய தொடரில் சில போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது" என கூறியுள்ளார்.
மீட்டு எடுப்பது மிகவும் கடினம்
"நவீன கிரிக்கெட் செல்லும் திசையை பார்த்தால், இது போன்ற உள்ளூர் தொடர்களை மீட்டு எடுப்பது மிகவும் கடினமான காரியம்" என வருத்தப்பட்டுள்ளார் சந்தீப் பாட்டில். வீரர்கள் தான் இது பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் எனவும் கூறி இருக்கிறார் சந்தீப் பாட்டில்.
சந்தீப் சொல்வது சரியா?
சந்தீப் பாட்டில் சொல்வது சரியா? ஐபிஎல்-இல் ஆடுவதற்காக வீரர்கள் ரஞ்சி தொடரில் ஆட மறுக்கிறார்களா? ஒரு சில வீரர்கள் வேண்டுமானால் இப்படி செய்யலாம். ஆனால், இந்திய அணிக்கு ஆட வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் அனைவரும் ரஞ்சி தொடர், துலீப் ட்ராபி தொடர் ஆகியவற்றில் ஆடி வருகிறார்கள் என்பதே உண்மை.
உள்ளூர் போட்டிகளில் இந்திய வீரர்கள்
உள்ளூர் போட்டிகளில் மூத்த வீரர்கள் கோலி, தோனி, தவான் தவிர்த்து கிட்டத்தட்ட அனைத்து இந்திய வீரர்களும் ஒரு சில உள்ளூர் போட்டிகளிலாவது ஆடியுள்ளார்கள். இந்திய அணியில் சமீபத்தில் இடம் பிடித்த மாயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில் ஆகியோர் உள்ளூர் போட்டிகளில் குவித்த ரன்கள் அடிப்படையில் தான் இந்திய அணியில் இடம் பெற்றனர்.
இந்திய அணியில் இடம்
புதிய வீரர்கள் உள்ளூர் போட்டிகளின் அடிப்படையிலும் இடம் பெற்று வருவதால், நிச்சயம் அடுத்த தலைமுறை வீரர்கள் இந்திய அணியில் இடம் வேண்டும் என்றால் உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருப்பார்கள்.
ஐபிஎல் கொடுத்த நட்சத்திரங்கள்
அதே சமயம் சில இளம் வீரர்கள் தங்களை டி20 போட்டிகளுக்கு என்றே தயார் செய்து கொள்கிறார்கள். இதை தவறு என்று கூற முடியுமா என்பது தெரியவில்லை. ஐபிஎல் போட்டிகளில் இந்திய அணிக்கு பும்ரா, குல்தீப் யாதவ், சாஹல், ஹர்திக் பண்டியா போன்ற சிறந்த வீரர்கள் கிடைத்துள்ளார்கள் என்பதையும் மறுக்க முடியாது.