சானியா மிர்சா சிறப்பு
குழந்தை பேறு காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகியிருந்த சானியா மிர்சா கடந்த மாதத்தில் இருந்து தன்னுடைய ஆட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளார். முன்னதாக தன்னுடைய மறுபிரவேசத்தை அறிவித்திருந்த சானியா மிர்சா, தொடர்ந்து ஆஸ்திரேலிய ஓபன் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
காயம் காரணமாக விலகல்
குழந்தை பேறுக்காக ஓய்வில் இருந்த சானியா மிர்சா, ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் விளையாடியதன்மூலம் குழந்தை பேற்றுக்கு பிறகு தன்னுடைய முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியை எதிர்கொண்டார். ஆனால் போட்டிகளின் ஆரம்பத்தில் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் விளையாடியபோது வலது கணுக்காலில் ஏற்பட்ட காயம் அவரது கிராண்ட் ஸ்லாம் கனவை தகர்த்தது.
துபாய் ஓபன் தொடரில் பங்கேற்பு
இந்நிலையில் காயத்திலிருந்து விரைவிலேயே மீண்டுள்ள சானியா மிர்சா, தற்போது துபாய் ஓபன் சாம்பியன்ஷிப் தொடரில் இரட்டையர் பிரிவில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கரோலின் கார்சியாவுடன் இணைந்து ரஷ்யாவின் அல்லா குத்ரியாவ்ட்சேவா மற்றும் ஸ்லோவேனியாவின் கட்டரினா ஸ்ரேபோட்னிக் ஜோடியுடன் மோதி வெற்றி பெற்றுள்ளார்.
சானியா ஜோடி அபாரம்
முதல் சுற்றில் ஆடிய சானியா ஜோடி ரஷ்ய வீராங்கனைகளை எதிர்த்து ஆடிய இந்த போட்டியில் 6க்கு 4, 4க்கு 6 மற்றும் 10க்கு 8 என்ற செட் கணக்கில் வெற்றி கொண்டுள்ளது. இதையடுத்து காலிறுதிக்கு முந்தைய போட்டிக்கு இந்த ஜோடி முன்னேறியுள்ளது. அங்கு 16வது சுற்றில் சீனாவின் சைசாய் ஜெங் மற்றும் செக் குடியரசை சேர்ந்த பார்போரா கிரெஜிகோவா இணையை சானியா ஜோடி எதிர்கொண்டு ஆடவுள்ளது.