ஜடேஜாவை வம்பிழுத்த மஞ்ச்ரேகர்
கடந்த ஆண்டில் நியூசிலாந்திற்கு எதிரான உலக கோப்பை அரையிறுதிப் போட்டியின் போது ரவீந்திர ஜடேஜா குறித்து துண்டு துணுக்கு வீரர் என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் தெரிவித்திருந்தார். இதேபோல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே குறித்தும் எதிர்மறை கருத்துக்களை தெரிவித்து ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். அவரின் இந்தக் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்கள், இதுகுறித்து மீம்ஸ் வெளியிட்டு பழிதீர்த்துக் கொண்டனர்.
மோசமான ஆண்டு என கருத்து
இதையடுத்து தன்னுடைய இந்த பேச்சு குறித்து அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். வர்ணனையாளராக தனக்கு கடந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாக இருந்ததாகவும் உணர்ச்சிகள் தன்னை மீறி வெளிப்பட்டது குறித்து தான் வருந்துவதாக தெரிவித்தார். தொழில்பூர்வமற்ற மற்றும் அநாகரிகமாகவும் தான் நடந்து கொண்டதாகவும் கூறிய அவர், இதற்காக வருத்தம் தெரிவித்திருந்தார்.
இரண்டாவது டி20 போட்டி
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிவரும் சர்வதேச டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஆக்லாந்தில் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் தொடரில் 5க்கு 2 போட்டிகளில் இந்தியா வென்று முன்னிலையில் உள்ளது. இதையடுத்து அடுத்த போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கே.எல்.ராகுலுக்கு மேன் ஆப் தி மேட்ச் விருது
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி 50 பந்துகளுக்கு 57 ரன்கள் எடுத்த கே.எல். ராகுலுக்கு மேன் ஆப் தி மேட்ச் விருது அளிக்கப்பட்டது. ஜடேஜா இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதலில் ஆடிய நியூசிலாந்து அணி இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பௌலிங்கால் 132 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சுருண்டது.
|
"பௌலருக்கே மேன் ஆப் தி மேட்ச் விருது"
இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து சொற்ப ரன்களில் ஆட்டத்தை இழந்தது. இதையடுத்து இந்த போட்டி குறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்ட சஞ்சய் மஞ்ச்ரேகர் மேன் ஆப் தி மேட்ச் விருது பந்துவீச்சாளர் ஒருவருக்கே அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
|
பதிலளித்த சஞ்சய் மஞ்ச்ரேகர்
சஞ்சய் மஞ்ச்ரேகரின் இந்த டிவீட்டிற்கு கமெண்ட் செய்த ரவீந்திர ஜடேஜா, அந்த பௌலர் யார் என்று கூறுமாறு கேட்டிருந்தார். ரவீந்திர ஜடேஜாவின் இந்த கேள்விக்கு பதிலளித்த சஞ்சய் மஞ்ச்ரேகர், ரவீந்திர ஜடேஜாவா அல்லது ஜஸ்பிரீத் பும்ராவா என்ற பார்க்கும்போது, ஜஸ்பிரீத் பும்ரா தான் களமிறங்கும் அனைத்து இடங்களிலும் சிறப்பாக பந்து வீசுபவர் என்று தெரிவித்திருந்தார்.
|
மீம்ஸ் வெளியிட்டு ரகளை
சஞ்சய் மஞ்ச்ரேகரின் இந்த பதிலால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், பல்வேறு கமெண்ட்டுகள் மற்றும் மீம்ஸ்களை வெளியிட்டு தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். அவர் தலைமறைவாக வேண்டிய தருணம் என்பது உள்ளிட்ட பல்வேறு மீம்களை வெளியிட்டு டிவிட்டர் தளத்தை ரகளை படுத்தினர். சஞ்சய் மஞ்ச்ரேகர் ஈகோவுடன் செயல்படுவதாகவும் தெரிவித்தனர். இதனால் டிவிட்டர் பக்கமே மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகியிருந்தது.