பகலிரவு போட்டி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பகலிரவு போட்டி நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்களை அடித்துள்ளது. தொடர்ந்து ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. நேற்றைய முதல் நாள் போட்டியில் 74 ரன்களை குவித்த கேப்டன் விராட் கோலி ரன் அவுட் ஆனார்.
ரன் அவுட்டான விராட்
துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானேவின் தவறான அழைப்பின்பேரில் ரன் ஓடி அவுட்டானார் விராட் கோலி. ஆனாலும் அவர் தனது கோபத்தை அதிகமாக வெளிப்படுத்தவில்லை. மாறாக அமைதியாக சென்ற அவரது செயல்பாடு ஆச்சர்யத்தை அளித்ததாக முன்னாள் வீரர் மற்றும் வர்ணனையாளர் சஞ்ச மஞ்ச்ரேகர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பொறுமையாக செயல்பட்ட விராட்
முழுக்க முழுக்க ரஹானேவின் தவறால் தான் அவுட் ஆகிய நிலையிலும் அவர் எந்தவித ரியாக்ஷனையும் காட்டாமல் அமைதியாக பெவிலியனுக்கு திரும்பியதாக மஞ்ச்ரேகர் சுட்டிக் காட்டியுள்ளார். சிறிய அளவில் எரிச்சல் அவரது முகத்தில் இருந்தாலும் அது அவருக்கு மிகவும் வருந்தத்தக்க சூழல் என்பதை புரிந்து கொள்ள முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.
சதத்திற்கான எதிர்பார்ப்பு
இந்த ஆண்டில் விராட் கோலி விளையாடும் இறுதி டெஸ்ட் போட்டி இது. இந்த போட்டிக்கு பிறகு அவர் தனது குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்பவுள்ளார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் சதத்தை அவர் அடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் ரன் அவுட் ஆனார்.