இந்திய அணி அறிவிப்பு
ஐபிஎல் 13வது சீசன் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் ஐபிஎல் முடியவுள்ள நிலையில், அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் இந்திய வீரர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளனர். இதற்கென இந்திய அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு குறித்து சர்ச்சை
இந்த தொடரின் 3 வடிவங்களிலும் இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேஎல் ராகுல் டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் செயல்பாட்டை மட்டும் வைத்துக் கொண்டு ராகுலை எப்படி டெஸ்ட் தொடருக்கு தேர்ந்தெடுக்கலாம் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தவறான முன்னுதாரணம்
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ஐபிஎல் செயல்பாட்டை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு வீரரை முக்கிய டெஸ்ட் தொடருக்கு தேர்ந்தெடுத்துள்ளது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று தெரிவித்துள்ளார். கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் அவர் சரியாக விளையாடாத நிலையில், அவரை தேர்ந்தெடுத்துள்ளது ரஞ்சி வீரர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம்
கடந்த தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 5 தொடர்களில் கேஎல் ராகுல் சரியாக விளையாடாததை சுட்டிக்காட்டியுள்ள மஞ்ச்ரேகர், இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது அதிர்ஷ்டம் என்றும் அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.