புறக்கணிக்கப்பட்ட சிராஜ்
இந்த தொடரில் மிகச்சிறப்பாக விளையாடிய ஓப்பனிங் வீரர் சுப்மன் கில் முதல் போட்டியில் இரட்டை சதமும், 3வது போட்டியில் சதமும் அடித்து மொத்தமாக 360 ரன்களை குவித்திருந்தார். இவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இதே போல 3வது போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்து 3 விக்கெட்களை கைப்பற்றிய ஷர்துல் தாக்கூருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால் தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்த சிராஜுக்கு எந்தவித பாராட்டுமே கிடைக்கவில்லை.
ரோகித்-ன் பதில்
கேப்டன் ரோகித் சர்மா கூட அவர் குறித்து பெரியளவில் பேசவில்லை. சுப்மன் கில், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ் ஆகியோர் குறித்து பாராட்டி பேசியிருந்த அவர், சிராஜுக்கு எந்தவித பாராட்டும் கொடுக்கவில்லை. கடந்த 5 போட்டிகளில் 17 விக்கெட்களை சாய்த்துள்ள அவருக்கு ஒரு ஆட்ட நாயகன் விருதுக்கூட கிடைக்கவில்லை என்பது தான் மோசமான தகவலாகும்.
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆதரவு
இந்நிலையில் இதுகுறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் குரல் எழுப்பியுள்ளார். அதில், ஆட்டம் முடிந்த பிறகு முகமது சிராஜ் குறித்து பெரியளவில் யாருமே பேசவில்லை. முகமது சிராஜ் தற்போது எதிர்கொண்டுள்ள சூழல்களை பார்த்தால் அவர் ஒரு முழுமையான அனுபவ வீரராக மாறியுள்ளார். இது ஒருநாள் கிரிக்கெட், டி20 மற்றும் டெஸ்ட் வடிவத்திற்கும் பொருந்தும்.
அழுத்தமான சூழல்
சுப்மன் கில் ஒரு சதம், ஒரு இரட்டை சதம் அடித்தார் தான், இல்லையென்று நான் கூறவில்லை. ஆனால் ஒரு தரமான எதிரணியை, அதுவும் அழுத்தம் நிறைந்த போட்டிகளில் முகமது சிராஜ் தான் இந்திய அணிக்கு உதவினார். இந்தியாவுக்கு தேவைப்படும் விக்கெட்களை எடுத்துக்கொடுத்தார். ஆனால் அவருக்கு பெரிய அளவில் பாராட்டு கிடைக்கவில்லை என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.
சிறிது நாட்கள் ஓய்வு
இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் மோதவுள்ளது. ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களமிறங்கும் இதற்கான இந்திய அணியில் முகமது சிராஜுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இருப்பதால், அதற்கு தயாராகும் வகையில் இந்த விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.