வெற்றியை நழுவவிட்ட எஸ்ஆர்எச்
ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 6வது போட்டியில் ஆர்சிபி மற்றும் எஸ்ஆர்எச் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 150 ரன்களை மட்டுமே இலக்காக கொடுத்திருந்த போதிலும் எஸ்ஆர்எச் அணி இந்த போட்டியில் வெற்றியை கைநழுவியுள்ளது.
விமர்சகர்கள் கருத்து
இந்த போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணங்களாக பல்வேறு நிகழ்வுகளை விமர்சகர்கள் முன்வைத்து வருகின்றனர். அணியின் இறுதி 4 ஓவர்களில் பொறுமையாக விளையாடி இருக்க வேண்டிய மணிஷ் பாண்டே உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்து விழ்ந்தது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
முன்னாள் வீரர் கேள்வி
இந்நிலையில் அணியின் முக்கிய வீரராக உள்ள நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை நேற்றைய போட்டியில் விளையாட வைக்காததை முக்கிய காரணமாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார். அவர் ஆடாதது மட்டுமே தோல்விக்கு காரணம் என்று தான் கூறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமரசம் கூடாது
தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பேசியுள்ள மஞ்ச்ரேகர், பேட்டிங் சூப்பர்ஸ்டாராக உள்ள கேன் வில்லியம்சனை ஏன் நேற்றைய போட்டியில் ஆட வைக்கவில்லை என்று ஆச்சர்யம் தெரிவித்துள்ளார். அவர் கண்டிப்பாக அணியில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அதில் எந்த சமரசமும் செய்யக்கூடாது என்றும் மஞ்ச்ரேகர் கூறியுள்ளார்.
அதிகமான பேட்ஸ்மேன்கள் வேண்டும்
சென்னை போன்ற பிட்ச்களுக்கு அதிகமான பேட்ஸ்மேன்கள் வேண்டும் என்றும் மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார். கேன் வில்லியம்சன் போன்ற பேட்ஸ்மேனை சேஸிங்கிற்கு அதிகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். புதிய பேட்ஸ்மேன்களை கொண்டு இந்த சேஸிங்கை செய்ய முடியாது என்றும் நேற்று முன்தினம் கேகேஆர் அணியும் இதே பிரச்சினையை சந்தித்ததையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.