இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன கிரிக்கெட் தொடர் நவம்பர் 27 முதல் துவங்க உள்ளது. இந்த தொடரை இந்தியாவில் சோனி டென் தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது. இந்த முறை நான்கு மொழிகளில் வர்ணனை செய்ய உள்ளது அந்த தொலைக்காட்சி.
வர்ணனை
ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வர்ணனை செய்ய உள்ள நிலையில், யார், யார் வர்ணனையாளர்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எழுந்தது. அப்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி வர்ணனையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பெயரும் இடம் பெற்று இருந்தது.
விமர்சனம்
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பெயரைக் கண்ட ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அவரை பிசிசிஐ ஒதுக்கி வைத்திருந்தது. அவருக்கு சோனி டென் தொலைக்காட்சி தனிப்பட்ட முறையில் வர்ணனையாளர் பதவி அளித்துள்ளது. எனினும், ரசிகர்கள் சிலர் சோனி நிறுவனத்தை இதற்காக விமர்சனம் செய்து வருகின்றனர்.
என்ன நடந்தது?
2019 உலகக்கோப்பை தொடரின் போது சஞ்சய் மஞ்சரேக்கர் ரவீந்திர ஜடேஜாவுக்கு போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படாததை குறிப்பிட்டு அவர் முக்கிய வீரர் இல்லை எனப் பொருள்படும்படி "bits and pieces" வீரர் என்றார் அவர். அது அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஜடேஜா கோபம்
ஜடேஜா கோபம் கொண்டு அவரை திட்டி ட்விட்டரில் பதிவிட்டார். அதன் பின் 2019 அரை இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்த அவர் சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு நெத்தியடியாக பதிலடி கொடுத்தார். அதன் பின்னும் மஞ்ச்ரேக்கர் மீதான கோபம் தீரவில்லை.
பதவியை பறித்த பிசிசிஐ
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் அவரது வர்ணனையாளர் பதவியை பறித்தது பிசிசிஐ. அதனால் அவர் மனம் துவண்டு போனார். ஐபிஎல் தொடரை ஒளிபரப்பிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தன்னை வர்ணனையாளர் குழுவில் சேர்க்கும் என எதிர்பார்த்தார்.
வீரர்கள் விரும்பவில்லை
ஆனால், அதுவும் நடக்கவில்லை. இந்திய வீரர்கள் சிலர் அவரை விரும்பவில்லை என்பதால் அவரை நீக்கியதாக பிசிசிஐ அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையில் தான் சோனி தொலைக்காட்சியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
உரிமை
இந்தியா - ஆஸ்திரேலியா தொடரின் ஒளிபரப்பு உரிமை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பின் வசம் உள்ளது. அந்த அமைப்பிடம் இருந்து இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்யும் உரிமையை வாங்கி உள்ளது சோனி நிறுவனம்.
பிசிசிஐ அதிகாரம் செல்லுபடி ஆகாது
இந்த நிலையில், அங்கே பிசிசிஐ அதிகாரம் செல்லுபடி ஆகாது என்பதால் அதை பயன்படுத்தி சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வாய்ப்பு பெற்று இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த தொடரிலாவது அவர் சர்ச்சை ஏற்படுத்தாமல் இருப்பாரா?