சொதப்பிய ஜஸ்பிரீத் பும்ரா
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக சில போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து நீக்கப்பட்டிருந்த உலகதர பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, இந்த மாதத்தில் மீண்டும் சர்வதேச போட்டிகளில் களம் கண்டு விளையாடி வருகிறார். இந்நிலையில், இந்தியா -நியூசிலாந்து இடையில் ஹாமில்டனில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் அதிகமான ரன்களை கொடுத்து ஜஸ்பிரீத் பும்ரா சொதப்பினார்.
4 ஓவர்களுக்கு 45 ரன்கள்
ஹாமில்டனில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் 4 ஓவர்களை போட்ட ஜஸ்பிரீத் பும்ரா, நியூசிலாந்திற்கு 45 ரன்களை அள்ளிக் கொடுத்தார். இவரது ஓவரில் எதிரணி கேப்டன் கேன் வில்லியம்சன், ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசினார். ஆயினும் பௌலர் முகமது ஷமியால் இந்த போட்டி டிரா செய்யப்பட்டு சூப்பர் ஓவர் அளிக்கப்பட்டது. இதிலும் பந்துவீசிய பும்ரா, 17 ரன்களை கொடுக்க இந்தியா மேலும் நெருக்கடிக்கு ஆளானது.
தொடரை கைப்பற்றிய இந்தியா
இந்நிலையில் போட்டியில் 40 பந்துகளுக்கு 65 ரன்களை குவித்த ரோகித் சர்மா சூப்பர் ஓவரிலும் சிறப்பாக விளையாடி 2 பந்துகளில் 2 சிக்ஸ்களை அடித்து அணியின் வெற்றியை நூலிழையில் கைப்பற்றி கொடுத்து தொடரை கைப்பற்றவும் காரணமானார். சர்வதேச அளவில் பந்துவீச்சில் முதலிடத்தில் உள்ள ஜஸ்பிரீத் பும்ரா, தன்னுடைய காயத்தின் பாதிப்பிலிருந்து மீண்டு வராதது இந்த தொடரின்மூலம் கண்கூடாக தெரிந்தது.
|
கிரீசை பயன்படுத்த அறிவுறுத்தல்
இந்நிலையில் இந்த போட்டியில் பும்ரா பந்துவீசிய சூப்பர் ஓவரை தான் பார்த்ததாகவும், அவர் மிகச்சிறந்த பௌலர் என்பதில் சந்தேகமில்லை ஆனால் கிரீசை இன்னும் சிறிது பயன்படுத்தி பல்வேறு திசைகளில் புதிய பந்துவீச்சை அவர் மேற்கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சஞ்சய் மஞ்ரேகர் தொடர்ந்து இந்திய வீரர்கள் குறித்து பல்வேறு சூழல்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மஞ்ச்ரேகர் மீது பாய்ச்சல்
ஜஸ்பிரீத் பும்ரா குறித்த மஞ்ச்ரேகரின் இந்த கமெண்ட், அவரது ரசிகர்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர்குறித்து சமூகவலைதளத்தில் பல்வேறு கமெண்ட்கள் மற்றும் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். "நீங்கள் ஒரு சராசரி ஆட்டக்காரர்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்றும், "இத்தகைய துஷ்பிரயோகங்களை பயன்படுத்துவது தான் உங்களின் தொடர்ந்த விருப்பம்" என்றும் பல்வேறு கமெண்ட்டுகளை அவர்கள் தங்களது வலைபக்கங்களில் தெரிவித்துள்ளனர்.