இந்தியா மோசமான தோல்வி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை இந்திய சந்தித்துள்ளது. இந்த இரு இன்னிங்சிலும் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே 1 மற்றும் டக் அவுட் ஆகியுள்ளார். இந்திய அணியின் தோல்வியை தாண்டி அவரது இந்த ரன்கள் கேள்வியை எழுப்பியுள்ளது.
2வது இன்னிங்சில் 0
முதல் இன்னிங்சில் ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடிய நிலையில் துணை கேப்டன் ரஹானே சொதப்பினார். இரண்டாவது இன்னிங்சிலாவது அவர் ஸ்கோர் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டக் அவுட் ஆனார்.
தொடர்ந்து சொதப்பல்
இந்நிலையில் கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் சதமடித்த பின்பு அவர் எடுத்ததெல்லாம் சிறப்பான ரன் குவிப்பு இல்லை என்று முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
பேட்ஸ்மேனாக சொதப்பல்
ஒரு கேப்டனாக அவர் சிறப்பாக செயல்பட்டாலும் ஒரு பேட்ஸ்மேனாக தொடர்ந்து 27, 22, 4, 37, 24, 1 மற்றும் 0 ரன்களை கடந்த போட்டிகளில் எடுத்துள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். 100 ரன்களை எடுத்த பின்பு தனது சிறப்பான ஆட்டங்களை தரவே வீரர்கள் செயல்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.