வெட்டுக்கிளி படை எடுப்பு
வெட்டுக்கிளிகள் படை சில மாதங்கள் முன்பு வரை பாகிஸ்தானை நாசம் செய்தது, அடுத்து இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது அந்த படை. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படை பெருத்த பயிர் சேதத்தை உண்டாக்கி உள்ளது.
பயிர்கள் நாசம்
இந்த படையில் உள்ள பல கோடி வெட்டுக்கிளிகள் ஒரே நாளில் சுமார் 35,000 மனிதர்கள் உட்கொள்ளும் உணவை சேதம் ஆக்கும் என நிபுணர்கள் கூறி உள்ளனர். கொரோனா வைரஸால் ஏற்கனவே விவசாயிகள் உட்பட அனைத்து தொழில்களும் நலிவடைந்துள்ள நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் பீதியை ஏற்படுத்தி உள்ளன.
மும்பையில் கடும் பீதி
மகாராஷ்டிராவில் அடுத்து மும்பை பெரு நகரத்துக்குள் இந்த வெட்டுக்கிளிகள் படை நுழையலாம் என்ற பதற்றம் உள்ளது. மும்பையில் விவசாய நிலங்கள் அதிகம் இல்லை என்றாலும், வெட்டுக்கிளிகள் நகரத்தை சிதைத்து விடும் என்ற அச்சம் பரவி வருகிறது.
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பதிவு
மும்பை மக்கள் மத்தியில் இது பற்றிய பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மும்பையை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ட்விட்டரில், "வெட்டுக்கிளிகளை கண்டு பயப்பட வேண்டாம். நாம் பயிர்கள் இல்லை" என கூறி இருந்தார்.
ரசிகர்கள் கோபம்
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பதிவை கண்ட பல ரசிகர்கள் அவரை கடுமையாக சாடி வருகின்றனர். மனிதர்கள், பயிர்கள் இல்லை அதனால் மனிதர்களுக்கு பாதிப்பில்லை என்ற அர்த்தத்தில் அவர் கூறி இருந்தாலும், பயிர்கள் இல்லையென்றால் மக்கள் என்ன செய்ய முடியும்? என்பதே ரசிகர்களின் கேள்வி.
விவசாயிகள் முக்கியம் இல்லையா?
சிலர் நமக்கு ஒன்றும் ஆகாது. ஆனால், பயிர்கள் சேதம் அடைந்தால் விவசாயிகள் நிலை என்னவாகும்? அவர்களைப் பற்றி அக்கறை இல்லையா? எனக் கூறி அவரை விளாசி இருந்தனர். இந்த நிலையில், தன் பதிவுக்கு விளக்கம் அளித்துள்ளார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.
விளக்கம்
"எனது கடைசி பதிவு மிகவும் எளிமையானது. ஃபிளாட்களில் வசிக்கும் மும்பைவாசிகள் வெட்டுக்கிளி பற்றி அச்சத்தில் இருப்பதை குறிப்பிட்டு கூறி இருந்தேன்." என தன் பதிவுக்கு விளக்கம் அளித்து இருந்தார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். மேலும், தனக்கு விவசாயிகள் மேல் அக்கறை உண்டு என்பதை பற்றியும் கூறி இருந்தார்.
பொறுப்பே இல்லாமல் பேசினேனா?
நான் விவசாயிகளுக்கு எதிராக பொறுப்பே இல்லாமல் பேசினேனா? நான் மாரத்வாடாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று, சிலரின் கடனை அடைத்துள்ளேன். இன்னும் நிறைய செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.
சொல்ல வேண்டிய கட்டாயம்
நான் இதை பொதுவெளியில் சொன்னதே இல்லை. ஆனால், இன்று சில மோசமான நபர்களால் இதை சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என கூறி உள்ளார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இது போன்ற சர்ச்சைகளில் சிக்குவது மஞ்ச்ரேக்கருக்கு புதிது அல்ல.