ஏற்க மாட்டேன்
அதாவது, அஷ்வினை 'All Time Great' எனக்கூறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சஞ்சய், "ரவிச்சந்திரன் அஸ்வின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் விளையாடி வருவதை பார்க்கும் போது அவர் ஒரு சிறந்த வீரர் என்று நான் நினைக்கிறேன், ஆனால் 'எல்லா காலத்திலும் சிறந்த வீரர்' என மக்கள் அவரை கூறுவதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
SENA நாடுகள்
அஸ்வினிடம் உள்ள பிரச்னை என்னவென்றால் SENA என கூறப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் உள்ள மைதானங்கள் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு உகந்ததாகும். ஆனால் இந்த நாடுகளில் அஸ்வின் ஒரு முறை 5 விக்கெட் வீழ்த்தியதில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் இந்திய ஆடுகளங்களில் மட்டுமே அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். இந்திய ஆடுகளங்கள் அவருடைய சுழலுக்கு ஏற்றார்போல் இருப்பதால்தான் அவரால் இங்கு விக்கெட் வீழ்த்த முடிகிறது.
சிறந்த பவுலரா?
அஸ்வினை போலவே தான் ரவீந்திர ஜடேஜாவும், இந்திய ஆடுகளங்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை கொண்டவர். அதே போல கடந்த இங்கிலாந்து தொடரில் இந்திய ஆடுகளங்களில் அஷ்வினைவிட அக்சர் பட்டேல் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றினார். பல வீரர்களும் இப்படி இருக்கும் போது அஸ்வினை எப்படி அனைத்து கால சிறந்த பவுலர் என்று கூறுவது?" சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் அஷ்வின் குறித்தும், ஜடேஜா பற்றியும் சஞ்சய் மஞ்சேரக்கர் கருத்து கூறியிருப்பது இப்போது பஞ்சாயத்தாகியுள்ளது.
ஒரு சதம் கூட இல்லை
சரி.. வீரர்களை விமர்சிப்பது ஒருபக்கம் இருக்கட்டும். கிரிக்கெட்டில் சஞ்சய் மஞ்சரேக்கர் என்ன செய்திருக்கிறார் என்று பார்க்கலாம்? 1987 முதல் 96 வரை இந்திய அணியில் விளையாடிய சஞ்சய் 37 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறார். அடித்த மொத்த ரன்கள் 2043. அதிகபட்சம் 218. ஆவரேஜ் 37.14. ஒரு இரட்டை சதமும், 2 சதங்களும் அடித்திருக்கிறார். அந்த இரட்டை சதம் பாகிஸ்தானுக்கு எதிராக அடிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒரு சதமும், ஜிம்பாப்வேக்கு எதிராக ஒரு சதமும் அடித்துள்ளார். அஷ்வின் சாதிக்கவில்லை என்று கூறிய 'SENA' நாடுகளுக்கு எதிராக இவர் ஒரு சதம் கூட அடித்ததில்லை. இது டெஸ்ட் போட்டிகளின் நிலைமை. ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை, 74 ஆட்டங்களில் விளையாடி 1994 ரன்கள் அடித்திருக்கிறார். அதிகபட்சம் 105. ஒரேயொரு சதம் அடித்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக. ஆவரேஜ் 33.23.
ஆனா ஒருதலைப்பட்சம்?
கிரிக்கெட்டில் அவரது சாதனை குறித்து யாருக்கும் எந்த விமர்சனமும் இல்லை. இந்திய அணிக்காக பெரிதாக ஏதும் செய்யவில்லை என்றாலும், நாட்டுக்காக விளையாடியதால் இன்று வர்ணனனையாளராக இருக்கிறார். அதற்காக, மற்ற வீரர்களை 'Bits and Pieces' என்று கூறுவதும், 'அவர் அவ்வளவு ஒர்த் இல்லை' என்று கூறுவது சரியாகுமா? சச்சினோ, கங்குலியோ தான் வீரர்கள் சரியாக விளையாடாத போது விமர்சிக்க
வேண்டும் என்றில்லை. யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம். அதற்காக, அவர்களை மட்டம் தட்டும்படி கமெண்ட் செய்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதா என்பதே ரசிகர்களின் கேள்வி. குறிப்பாக, மும்பை வீரர்களை வானளவு புகழும் சஞ்சய், மற்ற வீரர்களை ஏளனம் செய்வது ஏற்றுக் கொள்ளவே முடியாது என்பதே பலதரப்பட்ட கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.