பிடிக்காத கருத்துக்கள்
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடந்த காலங்களில் சிறந்த நல்ல வர்ணனையாளராக அறியப்பட்டாலும், அவரது சில கருத்துக்கள் அவ்வப்போது ரசிகர்களுக்கு பிடிக்காத வகையில் அமையும். அதனால், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனையை பிடிக்காத ரசிகர்களும் உண்டு.
கடுமையான விமர்சனம்
இந்த நிலையில், சமூக வலைதளங்களின் வரவுக்கு பின் சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் கருத்துக்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. அவர் தன் போக்கை மாற்றிக் கொள்வார் என எதிர்பார்த்தால், அவர் நான் செய்வதை தான் செய்வேன் என பிடிவாதமாக ஒரு சார்பாக வர்ணனை செய்வது, சிறந்த வீரர்களை விமர்சிப்பது என நடந்து கொண்டார்.
மும்பை வீரர்களுக்கு சாதகம்
மும்பை மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மும்பை மாநில வீரர்கள் களத்தில் ஆடும் போது அவர்களை புகழ்ந்தும், அதே நேரத்தில் மற்ற வீரர்கள் ஆடும் போது அவர்கள் சிறப்பான ஆட்டத்தை சாதாரண ஆட்டமாக பாவிப்பதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
ஜடேஜா சர்ச்சை
ஆனாலும், அவருக்கு தொடர்ந்து பிசிசிஐ வர்ணனை செய்ய வாய்ப்பு அளித்து வந்தது. 2019 உலகக்கோப்பை தொடரின் இடையே இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா பற்றி மோசமாக கருத்து கூறி சர்ச்சையில் சிக்கினார். ஜடேஜாவிடம் ட்விட்டரில் திட்டு வாங்கினார்.
திட்டிய ஜடேஜா
குறிப்பாக, ஜடேஜாவை "bits and pieces" வீரர் என, முழுமையான வீரர் இல்லை என பொருள் படும்படி கூறி இருந்தார். அதைக் கண்ட ரசிகர்கள், மஞ்ச்ரேக்கரை வறுத்து எடுத்த நிலையில், ஜடேஜா நேரடியாக அவரது வர்ணனை பற்றி மோசமாக திட்டி இருந்தார்.
வேறு காரணம்
இந்த சம்பவத்தால் தான் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பிசிசிஐ பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கலாம் என கருதப்பட்டது. பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து சிலர் இப்படித் தான் கூறி இருந்தனர். ஆனால், தற்போது வேறு சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
கங்குலி பதவி சர்ச்சை
சௌரவ் கங்குலி கடந்த ஆண்டு பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அந்த பதவிக்கு வரும் முன்பு இரட்டை ஆதாயம் பெறும் வகையில் அவர் பல்வேறு பதவிகளில் இருப்பது பற்றிய சர்ச்சை எழுந்தது. அப்போது சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அது பற்றி பேசி இருந்தார்.
தேவையற்ற பேச்சு
பெங்கால் கிரிக்கெட் அமைப்பு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஐபிஎல் அணியில் ஆலோசகர் பதவியில் கங்குலி இருந்ததை பற்றி பேசி இருந்தார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். அந்த தேவையற்ற பேச்சுக்களால் தான் இப்போது சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
கங்குலி நீக்கினாரா?
கடந்த மாதம் நடைபெற இருந்த இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கு முன்பு தான் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கங்குலி நேரடியாக சஞ்சய் மஞ்ச்ரேக்கரை பதவியில் இருந்து நீக்கினாரா? அல்லது பிசிசிஐ அதிகாரிகள் எடுத்த முடிவை கங்குலி ஏற்றுக் கொண்டாரா? என்பது தெரியவில்லை.
ரசிகர்கள் வரவேற்பு
ரசிகர்கள் பலர் சஞ்சய் மஞ்ச்ரேக்கரை வர்ணனையாளர் பதவியில் இருந்து நீக்கியதை வரவேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. பிசிசிஐ அவரை நீக்கி இருந்தாலும், கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள் அவரை வர்ணனையாளர் பணிக்கு நியமிக்க வாய்ப்பு உள்ளது.