யூஏஇயில் துவக்கம்
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19ம் தேதி துவங்கி நவம்பர் 8ம் தேதிவரை யூஏஇயில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி எமிரேட்ஸ் கிரிக்கெட் சங்கம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த போட்டிகளில் பங்கேற்கும்வகையில் இந்திய வீரர்கள் ஒரு மாதம் முன்னதாகவே வரும் ஆகஸ்ட் 15ம் தேதி யூஏஇ பயணம் செய்யவுள்ளனர்.
ஐபிஎல்லில் சேர்த்துக்கொள்ள கோரிக்கை
இதனிடையே, இந்த ஐபிஎல் தொடரில் தன்னை மீண்டும் வர்ணனையாளராக சேர்த்துக் கொள்ள முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரின் போது ரவீந்திர ஜடேஜாவை துண்டு துணுக்கு வீரர் என்று மஞ்ச்ரேகர் கமெண்ட் செய்திருந்தார். இதையடுத்து அணிவீரர்கள் அளித்த புகாரையடுத்து மஞ்ச்ரேகர் வர்ணனையாளர் குழுவிலிருந்து நீக்கப்பட்டார்.
மீண்டும் சேர்க்க மஞ்ச்ரேகர் கோரிக்கை
இந்நிலையில் தான் விதிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்வேன் என்றும் தன்னை மீண்டும் வர்ணனையாளர் குழுவில் சேர்த்துக் கொள்ளும்படியும் பிசிசிஐக்கு மஞ்ச்ரேகர் இ-மெயில் அனுப்பியுள்ளார். இது இவர் பிசிசிஐக்கு அனுப்பியுள்ள இரண்டாவது இ-மெயில். இந்த மெயில்களில் அவர் தன்னுடைய கமெண்ட் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கங்குலி, ஜெய் ஷா முடிவு
இந்நிலையில் மஞ்ச்ரேகர் மன்னிக்கப்பட்டு மீண்டும் குழுவில் இணைக்கப்படுவார் என்று பிசிசிஐ நிர்வாக உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஜடேஜா விவகாரத்தில் மஞ்ச்ரேகர் ஏற்கனவே மன்னிப்பு கேட்டுள்ள நிலையில், நல்ல மற்றும் கிரிக்கெட் குறித்த அதிகமான தகவல்களை தெரிந்துள்ள அவர் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று அவர் கூறியுள்ளார். இதனிடையே இந்த விவகாரத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா இறுதி முடிவு எடுப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.