சொதப்பிய வர்ணனையாளர்
முன்னாள் ஆட்டக்காரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் சர்வதேச அளவிலான போட்டிகளில் வர்ணனை செய்து வருகிறார். இவ்வாறு மேற்கொள்ளும் கிரிக்கெட் வர்ணனைகளின்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி அடிக்கடி மாட்டிக் கொள்வது இவரது வழக்கமாக உள்ளது. இதற்கென பின்பு வருத்ததையும் தெரிவித்து வருகிறார்.
'துண்டு துணுக்கு வீரர்'
கடந்த ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியின் போது, ரவீந்திர ஜடேஜாவை 'துண்டு துணுக்கு வீரர்' என்று டிவிட்டரில் வர்ணித்திருந்தார் மஞ்ச்ரேகர். இதையடுத்து தற்போதுவரை இதற்கான பலனை அனுபவித்து வருகிறார். ஜடேஜாவின் ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். ஜடேஜாவும், மஞ்ச்ரேகரைவிட தான் இருமடங்கு போட்டிகளில் விளையாடியுள்ளதாகவும் தொடர்ந்து விளையாடி வருவதாகவும் பதிலடி கொடுத்திருந்தார்.
மன்னிப்பு கேட்ட மஞ்ச்ரேகர்
மேலும் சக வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவிடமும் நேரலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார் மஞ்ச்ரேகர். இதுவும் சமூகவளைதளத்தில் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் இதற்காக மன்னிப்பு கேட்டிருந்தார். 2019 வருடம் தனக்கு மோசமான ஆண்டாக இருந்தாகவும் வருத்தம் தெரிவித்திருந்தார்.
பிசிசிஐ நீக்கம்
இந்நிலையில் கடந்த இந்தியா -தென்னாப்பிரிக்கா இடையிலான சர்வதேச ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் மஞ்ச்ரேகரை வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து நீக்கி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. மேலும் ஐபிஎல் தொடரிலும் இவர் வர்ணனை செய்ய வாய்ப்பளிக்கப்படாது என்றும் பசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
'பொக்கிஷமாக உணர்கிறேன்'
இந்நிலையில், வர்ணனையாளர் பொறுப்பை தான் பொக்கிஷமாக உணர்வதாக சஞ்சய் மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பேசியுள்ள அவர், தன்னுடைய வேலை பிடிக்கவில்லை என்றால் தன்னை விலக்க பிசிசிஐக்கு உரிமை உண்டு என்று தெரிவித்துள்ளார். பிசிசிஐயின் முடிவை தான் மதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.