மேட்ச் பிக்ஸிங் விவகாரம்
2000மாவது ஆண்டில் கிரிக்கெட் உலகை உலுக்கியது மேட்ச் பிக்ஸிங் விவகாரம். அப்போதைய தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி கேப்டன் ஹன்சி குரோனியே தான் மேட்ச் பிக்ஸிங் செய்ததாக கூறி அதிர வைத்தார். இந்திய அணி, பாகிஸ்தான் அணி ஆகியவற்றிலும் அப்போது மேட்ச் பிக்ஸிங் புகார்கள் எழுந்தன.
மறுக்க முடியாத ஒன்று
அப்போது முதல் கிரிக்கெட் விளையாட்டில் மேட்ச் பிக்ஸிங் ஒரு அங்கமாக மாறியது. பல வீரர்கள் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக தடை செய்யப்படுவதும், விசாரணைக்கு உள்ளாவதும் மறுக்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. டி20 போட்டிகளின் வரவு மேட்ச் பிக்ஸிங்கை இன்னும் வளர்த்தது.
டி20 தொடர்கள்
ஐபிஎல், பிக் பாஷ் லீக் போன்ற உள்ளூர் டி20 தொடர்களை வைத்து உலகம் முழுவதும் பலரும் பெட் கட்டி வருகிறார்கள். டி20 போட்டிகளில் அதிகமாக மேட்ச் பிக்ஸிங் நடப்பதாகவும் புகார் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் சஞ்சீவ் சாவ்லா வாக்குமூலம் அதிர்ச்சி அளித்துள்ளது.
கைது செய்யப்பட்டார்
20 ஆண்டுகளாக சஞ்சீவ் சாவ்லா மீது மேட்ச் பிக்ஸிங் தொடர்பான வழக்குகள் உள்ளன. அவர் இங்கிலாந்தில் தலைமறைவாக இருந்த நிலையில், சில மாதங்கள் முன்பு டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
அனைத்து போட்டிகளும்..
அவர் காவல்துறை விசாரணையில், ஒரு கிரிக்கெட் போட்டி கூட நேர்மையாக ஆடப்படவில்லை, மக்கள் பார்க்கும் அனைத்து போட்டிகளும் பிக்ஸ் செய்யப்பட்டவை தான் என கூறி உள்ளார். முக்கியமான மேட்ச் பிக்ஸிங் புக்கி ஒருவரே இதைப் பற்றி கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்டர்வேர்ல்டு மாஃபியா கும்பல்
இது பற்றி சஞ்சீவ் சாவ்லா மேலும் கூறுகையில், இதன் பின்னணியில் மிகப் பெரிய அதிகாரவர்க்கம் மற்றும் அண்டர்வேர்ல்டு மாஃபியா கும்பல் உள்ளதாகவும், அவர்கள் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் கட்டுப்படுத்தி வருவதாகவும் கூறி உள்ளார்.
திரைப்படங்கள் போல..
திரைப்படங்கள் எப்படி முன்பே ஒருவரால் இயக்கப்பட்டு வெளியாகிறதோ, அதே போலவே கிரிக்கெட் போட்டிகளும் முன்பே முடிவு செய்யப்பட்டு நடப்பதாகவும் அவர் கூறி உள்ளார். இதன் பின்னணியில் இருக்கும் மிகப் பெரிய அண்டர்வேர்ல்டு மாஃபியா கும்பல் உள்ளனர், அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள், தான் ஏதேனும் கூறினால் அவர்கள் தன்னை கொன்று விடுவார்கள் எனவும் சஞ்சீவ் சாவ்லா காவல்துறை விசாரணையில் கூறி இருக்கிறார்.
ஒத்துழைக்கவில்லை
இந்த வாக்குமூலத்தில் சஞ்சீவ் சாவ்லா கையெழுத்து இடவில்லை எனவும் கூறப்படுகிறது. டெல்லி காவல்துறை தன் விசாரணை அறிக்கையில் சஞ்சீவ் சாவ்லா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றே குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் அவர் எப்படி மேட்ச் பிக்ஸிங் செய்தார் என்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சந்தேகம் எழுகின்றன
எப்படி அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் பிக்ஸிங் செய்ய முடியும்? அது சாத்தியமா? என்ற சந்தேகம் எழுகின்றன. அதே சமயம், மேட்ச் பிக்ஸிங் செய்யும் வீரர்களை கண்டுபிடித்த அளவுக்கு, அவர்களை அதில் ஈடுபடுத்தியவர்களை கண்டுபிடித்ததில்லை என்பதன் மூலம் அந்த மாஃபியா கும்பல் சக்தி வாய்ந்தது என சஞ்சீவ் சாவ்லா கூறுவதையும் மறுக்க முடியவில்லை.