3வது டி20 ஆட்டம்
தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. நேப்பியர் நகரில் உள்ள மெக்லீன் பார்க் மைதானத்தில் இன்று மதியம் 12 மணிக்கு போட்டி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடரை கைப்பற்ற இந்தியாவும், சொந்த மண்ணில் தோல்வியை தவிர்க்க நியூசிலாந்து அணியும் தீவிர முணைப்பு காட்டி வருகின்றன.
மீண்டும் ஏமாற்றமா?
இந்நிலையில் இந்த முக்கியமான போட்டியிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தர வேண்டாம் என ஹர்திக் பாண்ட்யா முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. கடந்த போட்டியிலேயே அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் வழக்கம் போல 6 ரன்களுக்கு வெளியேறி சொதப்பினார். தொடர்ச்சியாக அவரது மூன்றாவது சொதப்பலாகும். எனினும் அவருக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு தரவுள்ளனர்.
புள்ளிவிவரங்கள்
ரிஷப் பண்ட் இதுவரை 22 டி20 போட்டிகளில் விளையாடி 346 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 135.6 ஆகும். ஆனால் சஞ்சு சாம்சன் எந்த இடத்தில் வேண்டுமானாலும் களமிறங்கி ஆடக்கூடியவர். இதுவரை 6 டி20க்களில் மட்டுமே ஆடியுள்ள அவர் 179 ரன்களை குவித்துள்ளார். அதுவும் 140+க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடுகிறார்.
மீண்டும் போராட்டம்?
சஞ்சு சாம்சன் களமிறங்க வேண்டிய இடத்தில் ரிஷப் பண்ட், தீபக் ஹுடா என பலருக்கும் வாய்ப்பு தரப்பட்டு வருகிறது. நல்ல திறமையும், ஃபார்மும் இருந்த போதும், சஞ்சு சாம்சன் மீண்டும் மீண்டும் ஒதுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார் என்பதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். டி20 உலகக்கோப்பையில் அவருக்கு வாய்ப்பு தரவில்லை எனக்கூறி கேரளாவில் போராட்டம் நடக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.