முதலிடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஐபிஎல் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று துபாயில் நடைபெறவுள்ள ஐபிஎல்லின் 12வது போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதவுள்ளது.
மொத்தம் 159 ரன்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதிய முதல் போட்டியில் 74 ரன்களை அடித்த சஞ்சு சாம்சன், இரண்டாவது போட்டியில் 85 ரன்களை குவித்தார். இதையடுத்து இந்த இரு போட்டிகளில் மட்டும் விளையாடி இந்த சீசனில் இதுவரை 159 ரன்களை குவித்துள்ளார்.
இந்திய அணியில் இடம்பெறுவார்
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வழிகாட்டியாக உள்ள ஷேன் வார்னே, இதேபோல சஞ்சு சாம்சன் தன்னுடைய நிலையான ஆட்டத்தை இந்த தொடரில் தொடர்ந்து வெளிப்படுத்தினால், அடுத்ததாக இந்திய அணியின் அனைத்து வடிவங்களிலும் பங்கேற்று விளையாட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் இடம்பெறுவார்
சஞ்சு சாம்சன் தன்னுடைய சிறப்பான திறமையை கடந்த இரு போட்டிகளில் நிரூபித்துள்ள நிலையில், அவர் தொடர்ந்து இதேபோல விளையாடுவார் என்றும் வார்னே நம்பிக்கை தெரிவித்தார். அவர் கூடியவிரைவிலேயே சர்வதேச போட்டிகளில் பங்கேற்பார் என்றும் அவர் கூறினார்.