சக்லைன் முஷ்டாக்
பாகிஸ்தான் அணியின் மிகச் சிறந்த சுழற் பந்துவீச்சாளர் சக்லைன் முஷ்டாக் ஆவார். அவர் தான் தூஸ்ரா என்ற வகை பந்துவீச்சை அறிமுகம் செய்தார். தற்போது மிகச் சிறந்த சுழற் பந்துவீச்சு பயிற்சியாளராக வலம் வருகிறார். பல்வேறு அணிகளுக்கு பயிற்சி அளித்து உள்ளார். அவர் தான் திருமணம் ஆன புதிதில் நடந்த வேடிக்கையான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.
1999 உலகக்கோப்பை
1998இல் தான் சக்லைன் முஷ்டாக் திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரது மனைவி லண்டனிலேயே வாழ்ந்து வந்தார். 1999 உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடந்தது. அப்போது சக்லைன் முஷ்டாக் தன் மனைவியுடன் ஹோட்டலில் தாங்கி இருந்தார்.
தினசரி பயிற்சி
சக்லைன் முஷ்டாக் தினமும் காலை முதல் தீவிர பயிற்சி செய்து முடித்து விட்டு, மாலையில் தன் மனைவியுடன் நேரம் செலவிட்டு வந்துள்ளார். அதை ஒரு வழக்கமாகவே மாற்றி விட்டு இருந்தார் அவர். அது அவருக்கு கிரிக்கெட் - தனிப்பட்ட வாழ்க்கை இடையே ஒரு சமநிலையை வழங்கி இருந்தது.
பாகிஸ்தான் அணி கட்டுப்பாடு
இதன் இடையே பாகிஸ்தான் கிரிக்கெட் அணி புதிய கட்டுப்பாடு ஒன்றை கொண்டு வந்தது. வீரர்கள் மட்டுமே ஹோட்டலில் தங்க வேண்டும். குடும்பத்தினரை வீட்டுக்கு அனுப்பி விட வேண்டும் என கூறப்பட்டது. அதை ஏற்க மறுத்து விட்டார் சக்லைன் முஷ்டாக்.
மறைத்து வைக்க முடிவு
ஆனால், அணிக் கட்டுப்பாட்டை மீறினால் சர்ச்சை ஏற்படும் என்பதால் மனைவியை ஹோட்டல் அறையிலேயே மறைத்து வைக்க முடிவு செய்தார். அப்போது அணி மேலாளர் மற்றும் பயிற்சியாளர் வீரர்களின் அறையை அவ்வப்போது சோதனை செய்ய வருவார்கள்.
அலமாரியில் மனைவி
அப்போதெல்லாம் அவர் அறையில் இருந்த அலமாரி ஒன்றில் அவரை மறைந்து இருக்குமாறு கூறி உள்ளார். சில சமயம் சக வீரர்கள் கூட அவரது அறைக்கு வந்து பேசிக் கொண்டு இருப்பார்களாம். அப்போதும் அவரது மனைவி மறைந்து இருப்பாராம்.
வலுத்த சந்தேகம்
ஆனால், சக்லைன் முஷ்டாக் மனைவி அங்கேயே தான் இருக்கிறார் என சந்தேகம் வலுத்த நிலையில் அசார் மஹ்மூத் மற்றும் யூசுப் அவரிடம் வற்புறுத்தி கேட்டுள்ளனர். அப்போது மறைந்து இருந்த தன் மனைவியை வெளியே வருமாறு கூறி அதிர்ச்சி அளித்து இருக்கிறார்.
தோல்வி
அவர்களிடம் உண்மையை சொன்னாலும், அதன் பின்னரும் மனைவியை அறையிலேயே தங்க வைத்துள்ளார். பின்னர் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற போது அணி மனம் உடைந்த நிலையில் இருந்த போது தான் தன் மனைவியை லண்டனில் இருந்த வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.