திறமைமிக்கவர்
ஆடவர் கிரிக்கெட்டில் தலைசிறந்த விக்கெட் கீப்பர்கள் என்றால் ஆடம் கில்கிறிஸ்ட், மார்க் பவுச்சர், தோனி ஆகியோரை கூறுவார்கள். அவர்களை விட சாரா டெய்லர் திறன் வாய்ந்தவர் என புகழப்படுகிறார்.
அறிமுகம் எப்போது?
2006ஆம் ஆண்டு, தன் 17வது வயதில் சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார் சாரா டெய்லர். சுமார் 13 ஆண்டுகள் இங்கிலாந்து அணிக்காக கிரிக்கெட் ஆடி இருக்கிறார்.
ரன் குவிப்பு
அவர் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 226 போட்டிகளில் 6,533 ரன்கள் குவித்துள்ளார். இங்கிலாந்து அணியில் அதிக ரன் குவித்த வீராங்கனைகளில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் சாரா.
மூன்று உலகக்கோப்பை
இவரது முக்கிய சாதனை என்றால், மூன்று முறை உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து அணியில் இடம் பெற்றவர் என்பது தான். 2009ஆம் ஆண்டு உலக டி20 மற்றும் உலகக்கோப்பை என இரண்டையும் வென்ற அணியில் இடம் பெற்றார்.
2017 உலகக்கோப்பை
2017 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் சாரா எடுத்த 54 ரன்கள் மற்றும் 45 ரன்கள் இங்கிலாந்து அணியின் உலகக்கோப்பை வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
விக்கெட் கீப்பிங் எப்படி?
விக்கெட் கீப்பரான சாரா 226 போட்டிகளில், 232 விக்கெட் வீழ்ச்சிகள் செய்துள்ளார். மகளிர் கிரிக்கெட்டில் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து அதிக விக்கெட் வீழ்ச்சி செய்த வீராங்கனைகளில் சாரா முதல் இடத்தில் இருக்கிறார்.
சில திறன்கள்
இவரது சில திறன்கள் கிரிக்கெட்டின் ஆடவர், மகளிர் கிரிக்கெட்டில் எந்த காலத்திலும் வேறு யாருக்கும் இருந்ததில்லை என புகழாரம் சூட்டுகிறார்கள் விமர்சகர்கள். தன் உள்ளுணர்வு மூலம் பந்து வரும் திசையை கணித்து மின்னல் வேகத்தில் இவர் செய்யும் ஸ்டம்பிங்குகள் பிரபலமானவை.
மனநல பிரச்சனை
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் தலா 51 ஸ்டம்பிங் செய்துள்ள சாரா டெய்லருக்கு கடந்த சில ஆண்டுகளாக மனநல பாதிப்பு இருந்தது. போட்டிகளின் இடையே பதற்றம் அடைந்தார். அதனால் இடையே சில தொடர்களில் அவரால் பங்கேற்க முடியவில்லை.
மகளிர் ஆஷஸ் தான் கடைசி
சில மாதங்கள் முன்பு நடைபெற்ற மகளிர் ஆஷஸ் தொடர் தான் சாராவின் கடைசி கிரிக்கெட் தொடர். அந்த தொடரின் டி20 போட்டிகளுக்கு முன்பே மனநல பிரச்சனை காரணமாக விலகினார்.
ஓய்வு அறிவிப்பு
அதைத் தொடர்ந்து ஓய்வை அறிவித்துள்ளார் சாரா டெய்லர். இங்கிலாந்து அணியின் உடையை அணிந்ததற்கு பெருமை படுவதாக குறிப்பிட்டு, தன் கிரிக்கெட் வாழ்விற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடை பெற்றுள்ளார்.