கழட்டிவிட்ட பிசிசிஐ
இதில், தவான் இடம் பெறாதது பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால், ஹர்திக் டிராப் ஆவது ஹைலைட் நியூஸ் ஆனது. அதற்கு பிசிசிஐ சொன்ன காரணம், 'அவரால் இன்னும் பவுலிங் செய்ய முடியவில்லை' என்பது. ஐபிஎல் வரை அதகளமாக சிக்ஸர்களை பறக்கவிட்ட பாண்ட்யாவுக்கு, இங்கிலாந்து டூரில் இடம் கிடைக்கவில்லை. காரணம், அவரது நீண்ட கால முதுகு வலி. அவரால் பேட்டிங் செய்ய முடியும், ஆனால் பவுலிங் பண்ண முடியாது. அதனால் தான் அவரை கழட்டிவிட்டது பிசிசிஐ. இப்போது இலங்கைக்கு எதிரான டூருக்கு இந்திய 'பி' அணியுடன் செல்ல தயாராகி வருகிறார் பாண்ட்யா.
4 சிக்ஸர், 2 விக்கெட்
அதே சமயம், ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர்களுக்கான தேடலை பிசிசிஐ விரிவுப்படுத்தியுள்ளது. இதில், பிசிசிஐ-யின் முதல் தேர்வு ஷர்துள் தாகூர். ஐபிஎல் ஆனாலும் சரி.. சர்வதேச போட்டி என்றாலும் சரி, எப்போது இறக்கிவிட்டாலும் அதிரடியாக ஆடும் திறன் கொண்டவர். பந்துகளை க்ளியர் செய்வதில், ஒரு தேர்ந்த பேட்ஸ்மேன் போல விளையாடுகிறார். இவரால் மேட்சுக்கு மேட்ச் மூன்றிலிருந்து நான்கு சிக்ஸர்களும், 2 விக்கெட்டுகளும் அணிக்கு கிடைப்பது ஏறக்குறைய கன்ஃபார்ம் எனலாம். பவுலிங்கில் தெரிந்தோ, தெரியாமலோ முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை எடுப்பது இவரது கூடுதல் பிளஸ்.
பாண்ட்யா டவுட்
இந்நிலையில், இந்திய அணியின் பவுலிங் கோச் பரத் அருண் சமீபத்தில் பிடிஐ-க்கு அளித்த பேட்டியில், "தன்னால் ஒரு ஆல் ரவுண்டராக செயல்பட முடியும் என்பதை ஷர்துல் நிரூபித்துவிட்டார். ஆஸ்திரேலியாவில் அவரது செயல்பாடு சிறப்பாக இருந்தது. ஹர்திக் பாண்ட்யா அபார திறமை வாய்ந்தவர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் முதுகு வலிக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரிட்டது. அதன் பிறகு திரும்பி வருவது எளிதானது விஷயம் அல்ல. இப்போதைக்கு அவர் தனது உடல் வலிமையை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஆகையால், நாம் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்-ரவுண்டர்களை உருவாக்க வேண்டிய நிலையில் உள்ளோம்" என்றார். இவருடைய இந்த பேட்டி மூலம், ஹர்திக் பாண்ட்யாவுக்கு மாற்று வீரரை கண்டுபிடிக்கும் பணியை பிசிசிஐ முடுக்கிவிட்டிருப்பது உறுதியானது. அதேசமயம், 'பாண்ட்யாவுக்கு இப்போது உடல் வலிமையை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்' என்ற பரத் அருணின் கருத்தும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. இதன் மூலம், தன்னால் பவுலிங் செய்ய முடியாத வரை பாண்ட்யா வீட்டிலேயே இருக்கலாம் என்பதை அவர் சொல்லாமல் சொல்கிறாரா என்ற சந்தேகமும் எழுந்தது.
ஒப்பேத்த முடியாது
இந்த நிலையில், சந்தேகத்தை மேலும் ஊர்ஜிதப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது முன்னாள் இந்திய வீரர் சரன்தீப் சிங்கின் பேட்டி. பாண்ட்யா குறித்து அவர், "டெஸ்ட் போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யாவை புறக்கணிக்கும் தேர்வாளர்களின் முடிவு புரிந்துகொள்ளத்தக்கது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரால் தொடர்ந்து பந்து வீச முடியவில்லை. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் தொடர்ந்து இடம் பிடிக்க வேண்டும் என்றாலும் கூட, அவர் முழுமையாக பந்து வீச தயாராக இருக்க வேண்டும். வெறும் ஒரு பேட்ஸ்மேனாக அவர் விளையாட முடியாது.
பாண்ட்யா சந்தேகமே
ஹர்திக் பந்து வீசவில்லை என்றால், அது அணியின் சமநிலையை பெரிதும் பாதிக்கும். இதன் காரணமாக நீங்கள் சூர்யகுமார் யாதவ் போன்ற ஒரு பேட்ஸ்மேனை தவற விட்டு, கூடுதலாக ஒரு பவுலரை சேர்த்து விளையாட வேண்டும். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் நாம் பார்த்தது போல, ஐந்து பவுலர்களுடன் எப்போதும் விளையாட முடியாது. அணிக்கு இப்போது வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், ஜடேஜா ஆகியோர் திரும்பி வந்துள்ளார், ஷர்துல் தாக்கூர் ஒரு ஆல்ரவுண்டராகவும் இருக்க முடியும், அதை அவர் நிரூபித்து காட்டியுள்ளார். ஹர்திக் பந்து வீச முடியாவிட்டால் அவர்கள் அனைவரும் அந்த வேலையைச் செய்யலாம்" என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம், அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் இடம் குறித்து தொடர்ந்து கேள்விகளும், கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த விமர்சனங்கள் அனைத்தையும் தகர்த்து, ஹர்திக் ஒரு முழு ஆல் ரவுண்டாக கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.