துபாய்:நிறவெறியுடன் பேசிய விவகாரத்தில் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது 4 போட்டிகளில் விளையாட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டர்பனில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியின் போது, பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது, தென் ஆப்பிரிக்க வீரர் பெகுல்க்வாயோவை நோக்கி, நிறவெறியுடன் பேசினார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி சர்பராஸ் மீது கடும் கண்டனங்கள் எழுந்தன. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் சர்பராஸ் அகமது செயலை கண்டிக்க சர்பராஸ் தமது டுவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டார்.
மேலும் தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் பெகுல்க்வேயோவை நேரடியாக சந்தித்தும் மன்னிப்பு கேட்டு கைகுலுக்கி சமரசமானார். பாகிஸ்தான் கேப்டனை மன்னித்து விட்டதாகவும், ஆனால், இதை ஐசிசி சும்மா விடாது என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபிளசிஸ் தெரிவித்திருந்தார்.
அதை உறுதிப்படுத்துவது போல... அடுத்துவரும் 4 போட்டிகளுக்கு பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது விளையாட ஐசிசி தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. அதனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்து வரும் 2 ஒரு நாள் போட்டிகளிலும், இரு டி20 போட்டிகளிலும் சர்பராஸ் அகமது விளையாட முடியாது.
இது குறித்து பேசிய ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சார்ட்சன், நிற வெறியுடன் நடந்து கொள்வதில் ஐசிசி எந்த விதத்திலும் யாரையும் சமரசம் செய்து கொள்ளாது. சர்பராஸ் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டு, வெளிப்படையாக மன்னிப்பு கோரிவிட்டார்.
இதைக் கருத்தில் கொண்டு அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விதிமுறைகள் படி, சர்பராஸ் அகமது நிறவெறி விழிப்புணர்வு குறித்த பயிலரங்குக்கு செல்ல வேண்டும். இது குறித்து ஐசிசி பாகிஸ்தான் வாரியத்துடன் கலந்து பேசி எப்போது எப்படி நடத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கும் என்று கூறினார்.
ஆனால் இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஐசிசியின் இந்த முடிவு கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், ஐசிசி விதி முறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.