அன்டர் -19 உலக கோப்பையில் தாறுமாறு
இந்தியாவின் இளம் சூறாவளியாக வலம் வந்துக் கொண்டிருப்பவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். ஐசிசியின் அன்டர் -19 உலக கோப்பை தொடரில் பங்கேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடந்து முடிந்துள்ள அரையிறுதியில் சதமடித்து, பாகிஸ்தானை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை புரிந்தவர். தன்னுடன் ஆடிய திவ்யான்ஷ் சக்சேனாவுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 179 ரன்களை அடித்து மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் பாகிஸ்தான் தோல்விக்கு காரணமானவர்.
அரையிறுதியில் விளாசிய ஜெய்ஸ்வால்
உலக கோப்பையின் அரையிறுதியில் 113 பந்துகளுக்கு 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸ்களுடன் 105 ரன்களை விளாசிய ஜெய்ஸ்வால், இந்த உலக கோப்பை தொடரில் மொத்தமாக 312 ரன்களை அடித்து, தொடரின் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பாராட்டுக்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள அன்டர் -19 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இவரது பங்களிப்பு அணியில் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாடம் கற்க அறிவுறுத்தல்
அன்டர் -19 உலக கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டத்தை தன்னுடைய யூடியூப் சேனலின்மூலம் மெச்சிய பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர், அவர் இந்திய அணியில் இடம்பெற்று பல்வேறு உயரங்களை தொடுவார் என்றும் அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் வாழ்க்கையில் இருந்து பாகிஸ்தான் அன்டர் -19 வீரர்கள் பாடம் கற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். சாதனைகளின் பின்னால் ஜெய்ஸ்வாலும், ஜெய்ஸ்வாலின் பின்னால் பணமும் ஓடுவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜெய்ஸ்வாலின் ஆரம்ப வாழ்க்கை
உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஜெய்ஸ்வால், தன்னுடைய தந்தையுடன் மும்பைக்கு வந்து ஆசாத் மைதானத்திற்கு அடிக்கடி சென்று பயிற்சி மேற்கொண்டதாகவும் ஆனால் தன்னுடைய தந்தை தன்னுடைய ஊருக்கு திரும்பி செல்ல முற்பட்டபோது, தான் திரும்ப மறுத்து, மும்பையிலேயே தங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் தன்னுடைய ஆட்டத்தின்மூலம் ஆசாத் மைதானத்தில் தங்க இடம் கிடைத்ததாகவும், ஆனால் விளக்குகள், கழிவறை இல்லாமல் அங்கு தங்க வேண்டியிருந்ததாகவும் கூறியுள்ளார்.
சக வீரர்கள் முன்னிலையில் பானிப்பூரி விற்பனை
அந்த சமயத்தில் தன்னுடைய குடும்பத்தினரிடமிருந்து எந்தவித உதவியும் கிடைக்காத நிலையில், தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக ஜெய்ஸ்வால் பானிப்பூரி விற்றுள்ளார். அப்போது அவருடன் விளையாடிய சக வீரர்கள் பானிப்பூரி சாப்பிடுவதற்காக அவர் வேலைப்பார்த்த கடைக்கு வந்தது தனக்கு நெருக்கடியை தந்ததாக ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். காலையில் போட்டிகளில் விளையாடி சதமடித்துவிட்டு மாலையில் பானிப்பூரி விற்றது தனக்கு வருத்தத்தை அளித்ததாகவும், ஆனால் தன்னுடைய முழு கவனமும் கிரிக்கெட்டில் இருந்ததால், அந்த சிறிய வேலை தனக்கு முக்கியமாக இருந்ததாகவும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
விஜய் ஹசாரே கோப்பை தொடரில் விளையாட்டு
இதையடுத்து ஆசாத் மைதானத்தில் இருந்த பயிற்சியாளர் ஜூவாலா சிங் கண்ணில் ஜெய்ஸ்வால் பட்டுள்ளார். அவரின் துணையுடன் கடந்த ஆண்டில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை தொடரில் விளையாட தேர்வான நிலையில், மும்பைக்காக விளையாடி ஜெய்ஸ்வால், அந்த தொடரில் ஜார்கண்டிற்கு எதிரான போட்டியில் 154 பந்துகளில் இரட்டை சதம் அடித்து அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார்.
அன்டர் -19 உலக கோப்பையில் பங்கேற்பு
இதையடுத்து ஜெய்ஸ்வாலுக்கு தொடர்ந்து ஏறுமுகமாக இருந்தது. குறுகிய காலத்திலேயே அடுத்ததாக அன்டர் -19 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற அவர், அந்த தொடரில் சிறப்பாக விளையாடி இதுவரை மொத்தம் 312 ரன்களை குவித்து தொடரில் அதிக ரன்களை எடுத்த ஆட்டக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் சதமடித்து இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்த காரணமாக இருந்தார்.
ரூ.2.4 கோடிக்கு ஏலம்
இதனிடையே நடந்து முடிந்துள்ள ஐபிஎல் 2020க்கான ஏலத்திலும் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இளம் வீரர் என்ற பெருமையும் ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்துள்ளது. இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஜெய்ஸ்வால் விளையாடவுள்ளார். இவரை 2.4 கோடி ரூபாய்க்கு அந்த அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஐபிஎல்லில் மட்டுமின்றி இந்திய அணியிலும் பங்கேற்று அக்தரின் கருத்தை உண்மையாக்கும்வகையில் பல உயரங்களை இவர் தொடுவார்.