பாகிஸ்தான் தொடர்
பிஎஸ்எல் தொடர் அபுதாபியில் உள்ள மைதானத்தில் ஜூன் 5ம் தேதி தொடங்கி ஜூன் 20ம் தேதி முடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி வீரர்கள், ஊழியர்கள், நடுவர்கள் என அனைவரும் அபுதாபி சென்றடைந்து குவாரண்டைனை முடித்துள்ளனர். சில அணிகள் தங்களது பயிற்சி ஆட்டங்களையும் இன்று தொடங்கியிருந்தன.
அனுமதி பிரச்சினை
ஆனால் தொலைக்காட்சி ஒளிபரபரப்பு குழுக்களுக்கு அனுமதி தர அபுதாபி அரசு இழுத்தடித்து வந்தது. குறிப்பாக இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க குழுக்களுக்கு அனுமதி கிடைக்காமலேயே இருந்தது. இதே போல் முன்னதாக வீரர்களின் விமானம் தரையிறங்குவதிலும் அனுமதி பெற தாமதமானது. இதனால் தொடரின் அட்டவணையும் மாற்றி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
புதிய அட்டவணை
இந்நிலையில் தற்போது அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிட்டது. போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து அனுமதிகளையும் அபுதாபி அரசிடம் இருந்து பெறப்பட்டுவிட்டன. இதனால் பிஎஸ்எல் தொடரின் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் போட்டிகள் ஜூன் 9ம் தேதி தொடங்கி ஜூன் 24ம் தேதி நிறைவடைகிறது.
போட்டி விவரங்கள்
மொத்தம் உள்ள 16 நாட்களில் 6 டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதாவது ஒரே நாளில் 2 போட்டிகளை நடத்தி முடிக்கப்படும். அதில் ஒரு டபுள் ஹெட்டர்ஸ் ஆனது ப்ளே ஆஃப் போட்டிகளின் போதே திட்டமிடப்பட்டுள்ளது. சாதாரண போட்டிகள் பாகிஸ்தான் நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்கவுள்ளது. இதுவே டபுள் ஹெட்டர்ஸ் தினத்தின் போது முதல் போட்டி மாலை 6 மணிக்கும், 2வது போட்டி இரவு 11 மணிக்கு நடைபெறவுள்ளது. போட்டிகளின் முழு அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.