இரு வாரங்களுக்கு முன்பு
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடன் மோதுகிறது. அதற்கு இன்னும் ஒரு மாத காலம் இடைவெளி இருப்பதால், இந்த நேரத்தை பயன்படுத்தி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளிடம் இங்கிலாந்து மோதி வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற இலங்கை தொடரில், டி20, ஒருநாள் என்று வாஷ் அவுட் செய்து திருப்பி அனுப்பியது இலங்கை. இந்த சூழலில், தற்போது பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
பாபர் அசம்
மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. இதன் முதல் ஒருநாள் போட்டி நேற்று (ஜுலை.8) கார்டிஃபில் நடைபெற்றது. இங்கிலாந்து வீரர்களில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால், இரண்டாம் தர இங்கிலாந்து அணியை அந்நாட்டு வாரியம் களமிறக்கியது. பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதேசமயம், பாகிஸ்தான் தங்களது முழு பலத்துடன் விளையாடியது. பாபர் அசம் கேப்டனாக செயல்பட, ஃபக்கர் சமான், இமாம் உல்-ஹக் என்று டாப் வீரர்கள் அந்த அணியில் இடம்பெற்றிருந்தனர்.
21.5வது ஓவரில் வெற்றி
இதில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், யாரென்றே தெரியாத இங்கிலாந்து 'சுட்டிக் குழந்தை' பவுலர்களிடம் தடுமாறியது. 35.2 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 141 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக ஃபக்கர் சமான் 47 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சகிப் முகமது என்ற வீரர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் பவுலிங்கை சிதறடித்து, ஒரேயொரு விக்கெட்டை மட்டும் இழந்து, 21.5வது ஓவரிலேயே சேஸிங் செய்து வெற்றிப் பெற்றது.
Recommended Video
ரசிகர்கள் கிண்டல்
பாகிஸ்தானின் முதல் தர அணி, இரண்டாம் தர இங்கிலாந்து அணியிடம் செமத்தியாக அடி வாங்கியிருக்க, ரசிகர்கள் அதனை கிண்டல் செய்து வருகின்றனர். ஜிம்பாப்வே அல்லது கென்யா அணிகளுக்கு எதிரான தொடர் எப்போது என்று சொல்லுங்கள் என்று நக்கலடிக்க, கப்சிப் மோடில் இருக்கிறது பாகிஸ்தான் அணி. என்னதான் இங்கிலாந்து பிட்சாக இருந்தாலும், தோற்பதிலும் ஒரு நியாய தர்மம் வேண்டாமா?