துபாய்: யாரோ தமிழக வீரர்களுக்கு செய்வினை வைத்துவிட்டார்கள் போல. மீண்டும் மீண்டும் ஐபிஎல் தொடரில் தமிழக வீரர்களால் கொரோனா ஊடுருவி வருகிறது.
ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதி அமீரகத்தில் கடந்த செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
3 முறை தொடர்ந்து ஒரே தவறு.. பஞ்சாப் அணியை வளர்த்துவிட்ட ராஜஸ்தான்.. கடின இலக்கை எளிதாக துரத்தியது!
இதில், இன்று நடைபெறும் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்தியாவில் ஐபிஎல் 2021 தொடர் ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே.3ம் தேதி வருண் சக்கரவர்த்திக்கு முதன் முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு வீரராக பரவியது. கொல்கத்தா அணியை சேர்ந்த தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி, தனது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக பயோ பபுளை விட்டு வெளியேறி மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்தார். பின்னர் எந்தவித குவாரண்டைனிலும் இல்லாமல் அணியின் பபுளுக்குள் நுழைய, கொரோனா ஐபிஎல் பபுளுக்குள் என்ட்ரி கொடுத்தது.
இதையடுத்து கொல்கத்தா அணியின் நான்கு வீரர்களுக்கு அடுத்தடுத்து ஐபிஎல் தொற்று ஏற்பட, அலறிய பிசிசிஐ தேதி குறிப்பிடாமல் தொடரை ஒத்திவைத்தது. இதன் பிறகு ஒருவழியாக, உலகம் முழுவதும் கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் வந்து, இந்தியா உட்பட ஒவ்வொரு நாடுகளின் இயக்கமும் ஓரளவுக்கு சீராக, ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதமுள்ள போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த செப்.19ம் தேதி ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பாதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், இன்றைய (செப்.22) லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத விதமாக, ஐதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுடன் தொடர்பில் இருந்த விஜய் சங்கர் உள்பட 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நடராஜன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். எனினும், விஜய் சங்கர் உட்பட 6 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளதால், இன்று திட்டமிட்டப்படி போட்டி நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த முறையும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியால், கடும் கட்டுப்பாடுகள் நிறைந்த ஐபிஎல் பயோ-பபுளுக்குள் கொரோனா நுழைந்து ஆட்டம் காட்டிய நிலையில், இப்போது மற்றொரு தமிழக வீரரான நடராஜன் மூலம் மீண்டும் ஐபிஎல் பயோ-பபுளுக்குள் கொரோனா நுழைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதென்னடா.. தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை என்பது போல், தமிழக வீரர்கள் மீண்டும் ஐபிஎல் தொடருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்போது விஜய் சங்கர் உட்பட 6 பேருக்கு நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது. இன்று அவர்கள் விளையாடியிருக்கும் பட்சத்தில் ஒருவேளை நாளை மீண்டும் எடுக்கப்படும் சோதனை அவர்களில் யாருக்காவது கொரோனா உறுதியானால்? அவர்களுடன் சேர்ந்து விளையாடிய மற்ற வீரர்களின் கதி?