மும்பை: ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில் போட்டிகளை நடத்த கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் பெரும் சவாலாக விளங்கி வருகிறது.
14வது ஐபிஎல் தொடர் கொரோனா அச்சுறுத்தலுக்கும் இடையே சென்னையில் வரும் ஏப்.9ம் தேதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னரே சமீபத்தில் நடந்து வரும் கொரோனா பிரச்னைகள் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடத்துவதற்கான சாத்தியகூறுகளை குறைத்து வருகின்றன.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. சென்னையில் நேற்று ஒரே நாளில் 3645 பேருக்கு கொரோனா உறுதியானது. மேலும் தேர்தலுக்கு பின்னர் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனினும் போட்டிகளை திட்டமிட்டபடி நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அங்கு மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா அணிகள் முதற்கட்டமாக விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே போல மற்ற 5 நகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக டெல்லி மைதானத்தில் ஏப்.28ம் தேதி முதல்தான் போட்டிகள் நடைபெறவுள்ளது. ஆனால் ஏப்.10 முதலே அங்கு மைதானம் மூடப்பட்டு ஊழியர்கள் அனைவரும் பயோ பபுளுக்குள் கொண்டு வரப்படவுள்ளனர். அதே போல அங்குள்ள ஊழியர்களுக்கு முதற்கட்ட கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டுவிட்டன.
இது ஒரு புறம் இருக்க மும்பை மைதானத்தின் நிலைமை மோசமாகி வருகிறது. வான்கேடே மைதானத்தில் இதுவரை 13 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல ஐபிஎல் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. எனவே அங்கு போட்டிகளை நடத்துவதற்கு எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன. மேலும் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்திலேயே நடத்தலாம் எனவும் பேசப்பட்டு வருகிறது.
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கொரோனா பாதுகாப்பு விஷயங்களில் பிசிசிஐ இன்னும் கொஞ்சம் சிறப்பாக முடிவெடுத்திருக்கலாம் என கிரிக்கெட் வல்லுநர்களால் கூறப்படுகிறது. அவை,
# ஐபிஎல்-ஐ இந்தாண்டும் அயல்நாட்டில் நடத்தலாம் என பல முதலீட்டாளர்களே அறிவுறுத்திய போதும் பிசிசிஐ இந்தியாவில் நடத்த திட்டவட்டமாக இருந்தது.
# பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லாத போது எதற்காக 6 நகரங்களில் போட்டிகளை நடத்த வேண்டும்.
# கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பிசிசிஐ தாமதமாக வெளியிட்டது. இதனால் ஏற்கனவே பல வகையில் கொரோனா உள்ளே நுழைந்துவிட்டது. அதே போல அயல்நாட்டு வீரர்களுக்கு விசா வழங்குவதிலும் தாமதம்.
# மைதானத்திற்கு அருகில் ஹோட்டல்களை புக் செய்ய வேண்டும் எனக்கூறாமல், எங்கு வேண்டுமானாலும் எடுத்ததுதான். உதாரணத்திற்கு மும்பையில் ஒரு அணி மைதானத்திற்கு 10கிமீ தூரத்தில் உள்ள ஹோட்டலை எடுத்துள்ளது. இதனால் கொரோனா பரவல் அபாயம் உள்ளது.
# அணிகள் ஹோட்டல்களுக்கு செல்வதற்கு முன்னர் அங்கிருந்த ஹோட்டல் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனரா என்பதை உறுதி செய்ய ஏதேனும் வழி இருந்ததா?
# கடந்த ஆண்டு ஐபிஎல்-ல் இருந்தது போன்று வீரர்களை கண்காணிக்க எந்த GPS ட்ராக்கிங் வழிமுறைகளும் இல்லை.
இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மோதவுள்ள மும்பை அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் கிரண் மோரேவுக்கு நேற்று கொரோனா உறுதியானது. சென்னையில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டல் முழுவதையும் மும்பை புக் செய்துள்ளது. அதே போல மார்ச் 1 முதலே பயோ பபுளை தொடங்கிவிட்டது. எனினும் பயிற்சியாளருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துள்ள மும்பை அணிக்குள்ளே கொரோனா நுழைந்தால் வேறு எந்த அணியாலும் கொரோனாவை தடுக்க முடியாது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எனினும் ஐபிஎல் போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்து வருவதாகவும், திட்டமிட்டபடி அனைத்து போட்டிகளும் நடக்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. எது எப்படியோ கொரோனா எனும் இருள் மேகம் ஐபிஎல் தொடரை கொஞ்சம் கொஞ்சமாக மூடி வருவது நன்றாக தெரிகிறது. திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுமா அல்லது மாற்றங்கள் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.