மூன்று முறை
இந்நிலையில், இரண்டாம் கட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அதாவது ஆகஸ்ட் 2021 முதல் 2023 வரை அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த 2021 - 2023 டெஸ்ட் தொடரில், ஒவ்வொரு அணியும் உள்நாட்டில் மூன்று முறையும், வெளிநாடுகளில் மூன்று முறையும் விளையாடியிருக்க வேண்டும். இதில் அதிக வெற்றிகளைப் பெற்று, அதிக புள்ளிகளைப் பெறும் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் நுழையும்.
ஒரே 4 போட்டிகள் தொடர்
இதில், ESPNcricinfo தகவலின் படி, ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள இங்கிலாந்து தொடரே, இந்திய அணியின் முதல் WTC Phase 2 சீரிஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இரண்டாவது Phase-ல் இந்திய அணி சந்திக்க உள்ள ஒரே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் இது மட்டும் தான். மேலும், 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி (பார்டர் - கவாஸ்கர் சீரிஸ்) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அது மட்டும் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் இரண்டாம் தொடரில், இந்தியா விளையாட உள்ள ஒரே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராகும். நான்கு டெஸ்ட்களைக் கொண்ட சுழற்சியின் ஒரே தொடராக இருக்கும். இதைத் தவிர்த்து, ஒட்டுமொத்தமாக, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் மொத்தம் 7 தொடர்களும், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட 13 தொடர்களும் நடத்தப்பட உள்ளன.
புள்ளிகள் காலி
அதேபோல், ஒவ்வொரு டெஸ்டுக்கும் ஒரே எண்ணிக்கையிலான புள்ளிகளை ஒதுக்க ஐ.சி.சி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வென்ற அணிக்கு 12 புள்ளிகள் கிடைக்கும், டிரா செய்தால், இரண்டு அணிகளுக்கும் தலா நான்கு புள்ளிகள் கிடைக்கும். அதுவே போட்டி "சமம்" ஆனால், இரண்டு அணிகளுக்கும் தலா ஆறு புள்ளிகள் வழங்கப்படும். மெதுவாக பந்து வீசும் அணிகளுக்கு இனி அபராதம் விதிக்கப்படும். மெதுவாக வீசும் பட்சத்தில், வீசப்படும் ஒவ்வொரு மெதுவான ஓவருக்கும், அவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையிலிருந்து ஒரு புள்ளி கழிக்கப்படும். எனினும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இரண்டாம் தொடருக்கான இறுதிப் போட்டி மற்றும் இடங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்தியா vs நியூசிலாந்து
இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்குகிறது. இதன் பிறகு நவம்பரில் நியூசிலாந்து செல்லும் இந்திய அணி 2 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இது, உலக டெஸ்ட் ஃபைனலில் தோற்றதற்கு, நியூசிலாந்துக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்க இந்தியாவுக்கான சரியான வாய்ப்பு எனலாம். இந்த தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. எனினும், உலகக் கோப்பை டி20 தொடருக்கு பிறகு, இந்த டெஸ்ட் சீரிஸ் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தடுத்த தொடர்
இத்தொடருக்கு பிறகு விராட் கோலி படை, தென்னாப்பிரிக்காவில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தொடர் டிசம்பர் 2021 முதல் ஜனவரி 2022 வரையிலான காலக்கட்டத்தில் நடைபெறும் என்று தெரிகிறது. இதன் பிறகு, இந்தியாவில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கையுடன் இந்திய அணி மோதும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2022ம் ஆண்டின் பிற்பகுதியில் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் என்று தெரிகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் - கவாஸ்கர் தொடரை அடுத்தடுத்து இரு முறை இந்தியா கைப்பற்றி இருக்கும் நிலையில், அடுத்த தொடர் இந்தியாவிலேயே நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில், வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடும் என்று தெரிகிறது.