ரோகித் சர்மா வாழ்த்து
முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் சிஎஸ்கே அணயின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா இருவரும் நேற்று மாலை தங்களது ஓய்வை அறிவித்துள்ளனர். இதையடுத்து இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின்மூலம் அவர்களது வருங்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தோனியின் பாதிப்பு அதிகம்
தோனியின் ஓய்வு குறித்து பேசியுள்ள ரோகித் சர்மா, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர் தோனி என்று புகழ்ந்துள்ளார். கிரிக்கெட்டில் தோனியின் பாதிப்பு மிகவும் அதிகம் என்றும் கூறியுள்ளார். ஒரு சிறப்பான அணியை உருவாக்குவது எப்படி என்ற பார்வை தோனிக்கு அதிகமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பார்க்கலாம்
தொடர்ந்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தோனியை நீல ஜெர்சியில் மிஸ் செய்தாலும் மஞ்சள் ஜெர்சியில் தொடர்ந்து அவரை பார்க்கலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் வரும் செப்டம்பர் 19ம் தேதி டாஸ் போடும்போது சந்திக்கலாம் என்றும் கூறியுள்ளார். அடுத்த மாதம் 19ம் தேதி ஐபிஎல் போட்டிகள் துவங்கவுள்ள நிலையில், முதல் நாளில், நடப்பு சாம்பியனும் ரன்னர் அப் டீமூம் மோதுவது வழக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெய்னாவுடன் பசுமையான நினைவுகள்
இதையடுத்து தனது அடுத்த பதிவில் பேசியுள்ள ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சுரேஷ் ரெய்னாவிற்கு நல்ல கேரியர் இருந்த நிலையில், ஓய்வும் நல்லபடியாக அமைய வாழ்த்தியுள்ள ரோகித் சர்மா, இருவரும் அணியில் நுழைந்தது பசுமையாக நினைவில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.