நிலையான துவக்க வீரர்
வீரேந்தர் சேவாக் வரும் வரை இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரர்களாக பலர் ஆடி வந்தனர். ஆனாலும், நிலையான வீரர்கள் கிடைக்கவில்லை. 90களில் இருந்த அந்த பிரச்சனையை தீர்த்து வைத்தார் சேவாக். அதிரடி துவக்க வீரராக டெஸ்ட் போட்டிகளில் கலக்கினார்.
முதல் முச்சதம்
2004இல் பாகிஸ்தான் மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்து மிரள வைத்தார். அதுதான் இந்திய வீரர் அடிக்கும் முதல் முச்சதம். முல்தான் டெஸ்டில் 309 ரன்கள் எடுத்து அதிகபட்ச ரன்னை பதிவு செய்தார். அவரது சாதனையை ப[இன் அவரே முறியடித்தார்.
இரண்டாவது முச்சதம்
2008இல் சென்னை டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 319 ரன்கள் குவித்தார். இந்திய அளவில் இரண்டு முச்சதம் அடித்தே ஒரே பேட்ஸ்மேன் சேவாக் மட்டுமே. அடுத்து கருண் நாயர் ஒரு முச்சதம் அடித்துள்ளார்.
மூன்று முச்சதம் அடிக்கும் வாய்ப்பு
உலகிலேயே இரண்டு முச்சதம் அடித்த வீரர்கள் டான் பிராட்மேன், பிரையன் லாரா மற்றும் வீரேந்தர் சேவாக் மட்டுமே. இந்த சாதனையை முறியடித்து 2009 இலங்கை டெஸ்ட் போட்டியில் உலகிலேயே மூன்று முச்சதம் அடித்த வீரர் என்ற சாதனையை செய்ய இருந்தார் சேவாக்.
சேவாக் அதிரடி
இந்தியா - இலங்கை மோதிய டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி மும்பையில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்க்ஸில் 393 ரன்கள் குவித்தது. அடுத்து பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு முரளி விஜய் - சேவாக் அதிரடி துவக்கம் அளித்தனர்.
அதிரடி ஆட்டம்
இலங்கை அணியின் முத்தையா முரளிதரன், ரங்கனா ஹெராத் உள்ளிட்ட சிறந்த சுழற் பந்துவீச்சாளர்களின் பந்துகளை கூட வெளுத்து வாங்கினார் சேவாக். முரளி விஜய் 87 ரன்களில் வெளியேறிய நிலையில், ராகுல் டிராவிட் - சேவாக் ஆடி வந்தனர்.
ஒரே நாளில் 300?
இரண்டாம நாள் ஆட்டம் முடிவை நெருங்கிய போது சேவாக் 280 ரன்களை நெருங்கி இருந்தார். இன்னும் மூன்று அல்லது நான்கு ஓவர்கள் தான் இருந்தன. சேவாக் எப்படியும் 300 ரன்களை ஒரே நாளில் எட்டி விடுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
ராகுல் டிராவிட் எண்ணம்
ராகுல் டிராவிட் எப்போதுமே கிரிக்கெட்டின் அடிப்படை விதிகளை பின்பற்றுபவர். எப்போதுமே டெஸ்ட் போட்டியில் கடைசி சில ஓவர்களில் விக்கெட்டை இழக்கக் கூடாது என்பது அவரின் எண்ணம். அதை மற்ற பேட்ஸ்மேன்களையும் பின்பற்றுமாறு வலியுறுத்துவார். அன்றும் அதுதான் நடந்தது.
ஆசை வார்த்தை
கடைசி நேரத்தில் சேவாக்கை விக்கெட்டை இழக்காமல் ஆடுமாறு கூறினார். இப்போது அவசரமாக 300 ரன்களை அடிப்பதை விட, இப்போது நிதான ஆட்டம் ஆடி விக்கெட்டை காப்பாற்றி விட்டு, மறுநாள் புத்துணர்ச்சியுடன் வந்து 300, 400 ரன்கள் வரைக் கூட அடிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி உள்ளார்.
நழுவிய வாய்ப்பு
அதைக் கேட்ட சேவாக் நீங்களே மீதமுள்ள ஓவர்களில் நிதான ஆட்டம் ஆடுங்கள் என ஸ்ட்ரைக்கை டிராவிட்டுக்கு கொடுத்தார். அன்று 284 ரன்களுடன் இருந்த சேவாக், மறுநாள் 254 பந்துகளில் 293 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 300 அடிக்கும் வாய்ப்பை 7 ரன்களில் தவற விட்டார்.
இந்தியா வெற்றி
பின்னர் தான் முதல் நாளே 300 ரன்களை அடித்து இருப்பேன். ஆனால், டிராவிட் வார்த்தையை கேட்டு தான் அதை கோட்டை விட்டேன் என கூறினார் சேவாக். அந்தப் போட்டியில் இந்தியா 726 ரன்கள் குவித்தது. இலங்கை அணியை ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.