அடியாட்கள் வைத்து அடித்த வீரர்
இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர், டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பில் தேர்வாளராக இருக்கும் அமித் பண்டாரி, தன்னை அணியில் தேர்வு செய்யாததை அடுத்து, அடியாட்கள் வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது. டெல்லி மாநிலத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சேவாக் மற்றும் கம்பீர் இந்த தாக்குதல் குறித்து ட்வீட் போட்டுள்ளனர்.
|
தகுந்த நடவடிக்கை வேண்டும்
சேவாக் தன் பதிவில், "அணியில் தேர்வு செய்யாததற்கு தாக்குவது என்பது புதிய இறக்கம். அந்த அயோக்கியன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நம்புகிறேன்" என கூறியுள்ளார்.
|
வாழ்நாள் தடை செய்யணும்
கம்பீர் தன் பதிவில், "தலைநகரத்தின் மையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது சகிக்க முடியாததாக உள்ளது. இது அப்படியே மறைந்து போகக் கூடாது. தனிப்பட்ட முறையில் நான் அதை உறுதி செய்வேன். இதை ஆரம்பிக்க, அணியில் தேர்வாகாததை அடுத்து திட்டமிட்டு தாக்குதல் நடத்திய அந்த வீரர் மீது அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் ஆட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அணித் தேர்வு
அமித் பண்டாரி இந்திய அணிக்காக சில போட்டிகள் ஆடிய பந்துவீச்சாளர் ஆவார். தற்போது அவர் டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பில் தேர்வாளராக இருக்கிறார். அண்டர் 23 தேர்வுக்காக அவரும், பிற தேர்வாளர்களும் செயின்ட் ஸ்டீபன்ஸ் மைதானத்தில் குழுமி இருந்தனர்.
ஹாக்கி மட்டை, இரும்பு ராடு
அப்போது சுமார் 15 பேர் கொண்ட அடியாட்கள் அவரை ஹாக்கி மட்டை, இரும்பு ராடு மற்றும் சைக்கிள் செயின் கொண்டு தாக்கினர். காப்பாற்ற வந்தவர்களையும், மிரட்டியுள்ளனர். தாக்குதலில் படு காயமடைந்த அமித் பண்டாரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தேர்வாகாத வீரர்
இந்த சம்பவம் இந்திய கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட டெல்லி அண்டர் 23 கிரிக்கெட் அணிக்கு தேர்வாகாத ஒரு வீரர் தான் அமித் பண்டாரியை அடியாட்கள் வைத்து அடித்தார் என கூறப்படுகிறது. அவர் யார் என்ற விபரம் வெளியாகவில்லை.
காவல்துறை நடவடிக்கை
பழி வாங்கும் நோக்கில் அடியாட்களை ஏவி அமித் பண்டாரியை தாக்கிய அந்த வீரர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ரஜத் சர்மா கூறினார்.