இந்திய டெஸ்ட் அணியில் யார்
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆடவுள்ள இந்திய டெஸ்ட் அணியில் தற்போது துவக்க வீரர் இடத்திற்கு ப்ரித்வி ஷா, ராகுல், முரளி விஜய் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் உள்ளனர். இவர்களில் ரோஹித் சர்மா நீண்ட காலம் கழித்து இந்திய அணிக்கு திரும்பி உள்ளார்.
ப்ரித்வி மற்றும் ராகுல் இறங்கலாம்
இந்திய அணிக்கு இவர்களில் யார் துவக்கம் அளிக்கலாம் என சேவாக்கிடம் கேட்ட போது, "ப்ரித்வி மற்றும் ராகுல் இந்திய அணிக்கு துவக்கம் அளிக்கலாம். ஏனெனில், அதிரடி ஆட்டக்காரர் இருந்தால் நிறைய ரன்கள் குவிப்பார்கள், அணியை வெற்றி பெற வைப்பார்கள்" என கூறினார்.
அதிரடி ஆட்டத்தை விட மாட்டார் போலையே
சேவாக் சொன்ன காரணத்தை பார்த்தால் "அதிரடி ஆட்டத்தை அவர் ஓய்வு பெற்றாலும் விட மாட்டார் போலையே" என எண்ணும் அளவுக்கு இருக்கிறது. சேவாக்கை பொறுத்தவரை பந்து என்பதே பவுண்டரி அடிக்கத்தான் இருக்கிறது என்ற எண்ணம் உடையவர். அவர் எண்ணம் போல, டெஸ்டிலும் அதிரடியாக ஆடும் ராகுல், ப்ரித்வியை துவக்க ஆட்டக்காரர்களாக இறக்க வேண்டும் என கூறியுள்ளார். மற்ற வீரர்களில், முரளி விஜய் பொறுமையாக ஆடுவார். ரோஹித் கூட டெஸ்ட் என்றால் பொறுத்து இருந்து தான் ஆடுவார்.
இந்தியா தொடரை வெல்லுமா?
முன்னதாக இந்தியா தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களை இந்த ஆண்டு தோற்றுள்ளது. எனவே, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியில் முக்கிய வீரர்கள் வார்னர், ஸ்மித் இல்லாத நிலையில் இந்தியா எளிதாக டெஸ்ட் தொடரை வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.