ரோட் சேஃப்டி தொடர்
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சாலை பாதுகாப்பு டி.20 தொடர் என்ற பெயரில் டி.20 தொடர் இந்தியாவில் நடத்தப்படுகிறது. இதில் கடந்த கொரோனா காரணமாக இந்த தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நிறுத்தப்பட்ட போட்டிகள் ராய்ப்பூரில் நடந்து வருகிறது. இத்தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளின் முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டு ஆடுகின்றனர்.
அதிரடி ஜோடி
இந்தாண்டுக்கான தொடரில் இந்திய லெஜெண்ட்ஸ் அணி தான் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக பங்களாதேஷ் லெஜெண்ட்ஸ் அணியுடன் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியில் சச்சின் - சேவாக் ரசிகர்களுக்கு ரன் விருந்து கொடுத்தனர். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய சேவாக், 35 பந்துகளில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் 80 ரன்கள் குவித்தார். சச்சின் 26 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்தார். இந்திய லெஜெண்ட்ஸ் அணி அடுத்ததாக இன்று இங்கிலாந்து லெஜெண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
கிரிக்கெட் கடவுள்
இந்நிலையில் போட்டிக்கு தயார் ஆகும் விதமாக சச்சின் தனது தோள்பட்டை வலிக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வது போல் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் சேவாக், யுவ்ராஜ் உடன் உள்ளனர். அதில் பேசியுள்ள சேவாக், நமது கிரிக்கெட் கடவுள் இன்னும் கிரிக்கெட்டை விடவில்லை. ஊசிக்கு மேல் ஊசி போட்டுக்கொண்டிருக்கிறார் என தெரிவித்துள்ளார். இது குறித்து யுவ்ராஜிடம் அவர் கேட்டபோது, அவர் சச்சின் எப்போதும் ஒருபடி முன்னாள் இருக்கிறார் என பதிலளித்துள்ளார்.
குஷியான ரசிகர்கள்
இந்திய அணியின் ஜாம்பவான்கள் மீண்டும் இதுபோன்று நகைச்சுவையாக கலந்துரையாடுவதை பார்த்த ரசிகர்கள் சேவாக்கின் வீடியோவை இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இவர்கள் மூவரும் இணைந்து அடுத்த போட்டியில் பலம்வாய்ந்த இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணியை எதிர்கொள்விருப்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.