2 தொடர்களை வென்ற இங்கிலாந்து
கொரோனாவால் முடங்கியிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை 117 நாட்களுக்கு பிறகு இங்கிலாந்து அணி மீண்டும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் மூலம் துவக்கியது. இதில் 3ல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து தொடர்ந்து பாகிஸ்தானுடனும் 3 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த தொடரில் 2 போட்டிகள் டிரா ஆனது.
இன்று துவக்கம்
இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் அணியுடன் டி20 போட்டித் தொடரிலும் மோதவுள்ள இங்கிலாந்து அணி அதற்கான அணியை தனியாக அறிவித்துள்ளது. இதில் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இடம்பெறவில்லை. இன்று இந்த தொடரின் முதல் போட்டி ஓல்ட் ட்ரபோர்டில் துவங்கவுள்ளது.
ஸ்ரீகாந்த் நன்றி
இந்நிலையில் இங்கிலாந்தின் டி20 தொடருக்கான தனியான அணி குறித்து முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய தருணத்தில் போட்டிகளை விளையாடிய இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள்
கடுமையான விதிமுறைகளுக்கு மத்தியில் இந்த அணிகளுக்கிடையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ள 6 போட்டிகளின் தரம் சிறப்பாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். டி20 தொடருக்கு தனியாக அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மற்ற அணிகளும் இந்த யோசனையை கடைபிடிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பாகிஸ்தான் அணி பாபர் அசாம் போன்ற இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.