வங்கதேச அணி பேட்டிங்
இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகின்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி, பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகின்றது.
கேப்டன் விராத் கோலி கருத்து
எஸ்ஜி பிங்க் நிற பந்துகளை கொண்டு விளையாடும் இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது மற்றும் பீல்டிங் செய்வது வீரர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும் என்று செய்தியாளர்களிடம் பேசிய விராத் கோலி தெரிவித்திருந்தார்.
குறைவாக ஸ்விங் ஆகிறது
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக இரு அணி வீரர்களும் மேற்கொண்ட வலைப்பயிற்சியை நேரில் பார்வையிட்ட ஈடன் கார்டன் மைதான நிர்வாகி முகர்ஜி, குக்கபுரா பிங்க் பந்துகளை காட்டிலும், இந்த எஸ்ஜி பிங்க் பந்துகளின் பளபளப்பு குறைவாகவே உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பந்து குறைவாகவே ஸ்விங் ஆவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
போட்டியில் வித்தியாசம்
தொடர்ந்து பேசிய முகர்ஜி, தான் இந்த எஸ்ஜி பந்துகளை முதல்முறையாக பார்ப்பதாகவும் ஆனால் இந்த பந்துகளில் ஸ்விங் என்பது மிகப்பெரிய விஷயமாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் பயிற்சிக்கும் நிஜமான போட்டிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் காணப்படும் என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.
காத்திருந்து காண வேண்டும்
பயிற்சி ஆட்டத்தின்போது ஏற்படும் அனுபவம் நிஜமான போட்டியின்போது கிடைக்காது என்று தெரிவித்துள்ள முகர்ஜி, எஸ்ஜி பந்துகளுடனான வீரர்களின் அனுபவத்தை போட்டி முடியும்வரை காத்திருந்துதான் பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
15 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும்
இதேபோல சூரியன் மறையும் நிகழ்வும் போட்டியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பலதரப்பட்டவர்களின் கருத்துக்கும் அவர் விளக்கம் அளித்துள்ளார். ஈடன் கார்டன் மைதானத்தில் 15 நிமிடங்களில் சூரியன் மறையும் என்று தெரிவித்த அவர், அது மிகப்பெரிய பிரச்சினை இல்லை என்றும் கூறியுள்ளார்.