பந்து வகைகள் என்ன?
ஐசிசி சர்வதேச போட்டிகளில் எந்த வகை பந்து பயன்படுத்த வேண்டும் என இதுவரை கூறியதில்லை. விதிகளுக்கு உட்பட்டு இதுவரை மூன்று வகை பந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் இந்தியாவில் கையால் தயாரிக்கப்படும் "எஸ்ஜி டெஸ்ட்" வகை பந்துகள் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் இயந்திரம் மூலம் உருவாகும் கூக்கபுர்ரா பந்தையும், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகள் இங்கிலாந்தில் கையால் தயாரிக்கப்படும் "ட்யூக்" பந்தையும் பயன்படுத்துகின்றன.
குறை கூறிய அஸ்வின்
அஸ்வின் இங்கிலாந்து தொடரில் இருந்தே "ட்யூக்" பந்தையும், "கூக்கபுர்ரா" பந்தையும் புகழ்ந்து வந்தார். இந்திய பந்தை விட ட்யூக் சிறப்பாக இருப்பதாக கூறினார். அடுத்து இந்தியாவில் நடந்த முதல் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி முடிந்த உடன், இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் பெற்ற இமாலய வெற்றியை பற்றிக் கூட பேசாமல், எஸ்ஜி டெஸ்ட் பந்து சரியில்லை. எங்களால் சரியாக பந்துவீச முடியவில்லை என பெரிதாக குறை கூறினார்.
ஆதரவளிக்கும் கோலி
இப்போது இந்திய அணியின் கேப்டன் கோலி அஸ்வினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். "டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ற பந்து "ட்யூக்" பந்துதான். ஒரு சூழ்நிலை வந்தால், நான் ட்யூக் பந்து தான் உலகம் முழுவதும் பயன்படுத்த வேண்டும் என கூறுவேன். காரணம், அந்த பந்து போட்டியின் எந்த நேரத்திலும் ஒரே மாதிரியாக செயல்படுகிறது" என கூறினார்.
பந்தை மாத்திருவாங்களோ?
அஸ்வின் வம்படியாக இந்திய பந்தை பற்றி குறை கூறுவதையும், தொடர்ந்து கோலி அதற்கு ஆதரவு அளிப்பதையும் பார்த்தால், விரைவில் இந்தியாவில் பயன்படுத்தும் பந்தை மாற்றி விடுவார்களோ என்றே நினைக்கத் தோன்றுகிறது. காரணம், தற்போது இந்திய கிரிக்கெட்டில் கோலி சொல்வது தான் நடக்கிறது என ஒரே பேச்சாக இருக்கிறது. கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வருகிறது.. நீங்களும் கூட்டிக் கழித்து பாருங்கள்.