2வது போட்டி
முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சூழலில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியையும் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி பறிகொடுத்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து மகளிர் அணி வென்றது. 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும், இளம் வீராங்கனை ஷபாலி வர்மா செய்த விஷயம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஷபாலி வர்மா
ஆட்டத்தின் 17வது ஓவரில் எக்லஸ்டோன் வீசிய பந்தை ஷபாலி வர்மா இறங்கி ஆட நினைத்தார். ஆனால் பந்தை சரியாக கணிக்காததால் பேட்டில் கூட படாமல் கீப்பரின் கைகளுக்கு சென்றது. ஸ்டம்பிக் செய்ய விக்கெட் கீப்பர் எமி ஜோன்ஸ் முயற்சிக்க, சாதூர்யமாக செயல்பட்ட ஷாபாலி, தனது கால்களை நன்கு அகலப்படுத்தி கிரீஸுக்குள் சென்றார். எனினும் ஷபாலியின் முயற்சி தோல்வியில் தான் முடிந்தது. 44 ரன்களுக்கு ஸ்டம்ப் அவுட்டாகி வெளியேறினார்.
எம்.எஸ்.தோனி
இதே போன்ற முயற்சியை எம்.எஸ்.தோனி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் செய்தார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆடம் சாம்பா வீசிய பந்தை தோனி இறங்கி ஆட முற்பட்டார். ஆனால் அது கீப்பரின் கைகளுக்கு செல்ல, உடனடியாக தோனி இரு கால்களையும் அகலப்படுத்தி விக்கெட்டில் இருந்து தப்பினார். அப்போது அவர் 2.14 மீ அளவிற்கு தனது கால்களை விரித்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
வைரல் புகைப்படம்
தோனி - ஷபாலி வர்மா இருவரின் முயற்சியையும் புகைப்படம் மூலம் ஒப்பிட்டு தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 17 வயதாகும் ஷபாலி வர்மா தோனியை போலவே அதிரடி காட்டி வருகிறார் என்ற பேச்சுக்கள் ஏற்கனவே எழுந்தது குறிப்பிடத்தக்கது.