அப்ரிடி சர்ச்சைகள்
முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடி காஷ்மீர் விவகாரத்தில் எப்போதும் தன் கருத்தை கூறி வருபவர். அதற்காக இந்தியாவை அடிக்கடி சீண்டும் வகையில் பேசுவார். சில மாதங்கள் முன்பு பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அவர் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையானது.
கம்பீர் மோதல்
முன்னாள் இந்திய வீரரும் பாஜக எம்பியுமான கவுதம் கம்பீருடன் சமூக வலைதளங்களில் கடும் வாக்குவாதம் செய்து, சர்ச்சையில் அடிக்கடி சிக்கி வருகிறார் அப்ரிடி. இருவரும் கிரிக்கெட்டை தாண்டி தனிப்பட்ட எல்லை மீறி ஒருவரை, ஒருவர் விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர்.
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்
இந்தியா - பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடர் கடந்த சில ஆண்டுகளாக நடக்காதது குறித்து தான் பெரும்பாலும் முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பேசி வருகின்றனர். அப்ரிடியும் அதே விஷயத்தை கையில் எடுத்து மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
ஐபிஎல்-இல் கூட இடம் இல்லை
ஐபிஎல் அணிகள், தங்கள் அணிகளில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இடம் அளிப்பதில்லை. பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல்-இல் கடந்த சில ஆண்டுகளாக இடம் அளிப்பதில்லை. இதை எழுதப்படாத விதியாக ஐபிஎல் கடைபிடித்து வருகிறது. அதையும் விமர்சித்துள்ளார் அப்ரிடி.
அப்ரிடி என்ன சொன்னார்?
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை நடத்த பாகிஸ்தான் அரசு தயாராக இருப்பதாகவும், மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை அதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். மேலும், ஐபிஎல் வாய்ப்பை பாகிஸ்தான் வீரர்கள் இழந்துள்ளனர் என்றும் கூறினார்.
மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை..
"இந்தியா - பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடரை நடத்த பாகிஸ்தான் அரசு எப்போதும் தயாராக உள்ளது. ஆனால், மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை அது நடக்கும் என எனக்கு தோன்றவில்லை" என்று கூறினார் ஷாஹித் அப்ரிடி.
ஐபிஎல் இழப்பு
"ஐபிஎல் மிகப் பெரிய கிரிக்கெட் பிராண்ட். பாபர் ஆசாம் போன்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியா சென்று அழுத்தத்தில் விளையாட, மற்ற நாட்டு வீரர்களுடன் பகிர்ந்து கொள்ள நல்ல வாய்ப்பு. ஆனால், அந்த வாய்ப்பை பாகிஸ்தான் வீரர்கள் இழந்துள்ளனர்" என்றார்.
இந்தியாவில் ரசிகர்கள்
"இந்தியாவில் நான் கிரிக்கெட்டை அனுபவித்து ஆடினேன் என்பதில் சந்தேகமே இல்லை. இந்திய மக்களின் அன்பை, ஆதரவை நான் எப்போதும் மதிக்கிறேன். சமூக வலைதளங்களில் கூட இந்தியர்கள் பலர் என்னிடம் பேசுகிறார்கள். நான் அவர்களுக்கு பதில் அளிக்கிறேன்" என்றார் அப்ரிடி.
பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பு
2020 ஐபிஎல் தொடர் துவங்கி உள்ள நிலையில், பாகிஸ்தான் ரசிகர்கள் பலர் தங்கள் நாட்டு வீரர்களும் ஐபிஎல் தொடரில் ஆட வேண்டும் என்ற தங்களின் ஆசையை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இதைத் தான் அப்ரிடி விமர்சித்துள்ளார்.