பெரும் பரபரப்பு
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மோதல் என்றாலே பெரும் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். தோல்வி அடைந்தால் கடும் விமர்சனத்தை எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் இரு அணி வீரர்களும் கடும் அழுத்தத்தில் ஆடுவார்கள்.
அதிக வெற்றிகள்
வரலாற்றை புரட்டிப் பார்த்தால் இரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டிகளில் பாகிஸ்தான் அணி தான் அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. ஆனால், கடைசி 20 ஆண்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்திய அணி தான் பாகிஸ்தான் அணியை அதிக முறை தோற்கடித்துள்ளது.
சமீப போட்டிகள்
கடைசி இரு ஆண்டுகளில் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தி உள்ளது. எனினும், முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் சிலர் மொத்த கணக்கை எடுத்து வைத்துக் கொண்டு இந்திய அணியை, பாகிஸ்தான் அதிக முறை வீழ்த்தியது என பெருமை பேசி வருகின்றனர்.
வெற்றி - தோல்வி கணக்கு
இரு அணிகளும் மோதிய 59 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் 12 வெற்றிகளும், இந்தியா 9 வெற்றிகளுமே பெற்றுள்ளன. அதே போல, ஒருநாள் போட்டிகளில் 73 போட்டிகளில் பாகிஸ்தான் அணியும், 55 போட்டிகளில் இந்தியா அணியும் வெற்றி பெற்றுள்ளது.
அப்ரிடி பேச காரணம்
டி20 போட்டிகளில் மட்டுமே இந்தியா முன்னிலையில் உள்ளது. 8 போட்டிகளில் இந்திய அணி 6 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இந்த புள்ளிவிவரம் தான் ஷாஹித் அப்பிடி சர்ச்சையாக பேச முக்கிய காரணம். அப்ரிடி கடந்த இரு வாரங்கள் முன்பு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார்.
பாதிப்பில் இருந்து மீண்டு..
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த அவர் கிரிக்காஸ்ட் என்ற யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். இந்தியாவுடன் கிரிக்கெட் ஆடுவதை தான் விரும்பியதாக தெரிவித்த அப்ரிடி பின்னர் இந்திய அணியை தோற்கடிப்பதை குறித்து பேசினார்.
மன்னிக்குமாறு கேட்பார்கள்
"நாங்கள் இந்தியாவை பல முறை தோற்கடித்து இருக்கிறோம். நாங்கள் அவர்களை அதிகமாக தோல்வி அடையச் செய்ததால், அவர்கள் போட்டிகளுக்கு பின் எங்களிடம் மன்னிக்குமாறு கேட்பார்கள்." என்றார் அப்ரிடி. பரிதாபம் பார்த்து தங்களை விட்டு விடுமாறு இந்திய வீரர்கள் கெஞ்சினார்கள் என்றே அவர் கூறுவதாக புரிந்து கொள்ள முடிகிறது.
மிகவும் விரும்பினேன்
மேலும், "நான் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக ஆடுவதை மிகவும் விரும்பினேன். அப்போது அதிக அழுத்தம் இருக்கும். அவைகள் நல்ல அணிகள், பெரிய அணிகள். அவர்கள் நாட்டிற்கு சென்று அந்த சூழ்நிலையில் ஆடுவது பெரிய விஷயம்." என்றார் அப்ரிடி.
பொறுப்பற்ற பேச்சு
அப்ரிடியின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பாகிஸ்தான் பெருமையை ஏற்றிக் கூறுவதற்காக இந்திய வீரர்கள் மன்னிப்பு கேட்டதாக தரக் குறைவாக பேசினாரா? என தெரியவில்லை. ஆனால், இது முன்னாள் கேப்டனாக பொறுப்பற்ற பேச்சாகவே பார்க்கப்படுகிறது.