முடக்கம்
கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் உலகம் முடங்கிப் போய் உள்ளது. தற்போது கிரிக்கெட் ஆடி வரும் பெரும்பாலான வீரர்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். எனினும், முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உதவி வந்தார்.
ஷாஹித் அப்ரிடி உதவி
லாக்டவுன் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று குறித்த அச்சத்தால் தொழில்கள் முடங்கிய நிலையில், பாகிஸ்தானில் அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தேவையான பொருட்கள், முகக் கவசம் ஆகியவற்றை வழங்கி வந்தார் ஷாஹித் அப்ரிடி.
நிதி உதவி சர்ச்சை
இது தொடர்பாக இந்திய வீரர்கள் யுவராஜ் சிங்கம் ஹர்பஜன் சிங் அவருக்கு நிதி உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அப்ரிடி காஷ்மீர் பற்றிய சர்ச்சை பேச்சால் அது சர்ச்சையில் முடிந்தது. இது ஒருபுறம் இருக்க, அப்ரிடிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மோசமாக வலிக்கிறது
இது பற்றி வெளியிட்டுள்ள ட்வீட்டில், கடந்த வியாழன் முதல் நான் உடல்நலம் குன்றி இருக்கிறேன். என் உடல் மிக மோசமாக வலிக்கிறது. நான் பரிசோதனை செய்து கொண்டேன். துரதிர்ஷ்டவசமாக கொரோனா வைரஸ் பாஸிடிவ். வேகமாக உடல்நலம் தேற வேண்டும் என பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறி உள்ளார்.
மூன்றாவது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகும் மூன்றாவது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி ஆவார். முன்னதாக முன்னாள் வீரர்கள் தௌபீக் உமர் மற்றும் சபார் சர்பராஸ் ஆகியோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகினர்.
மற்ற கிரிக்கெட் வீரர்கள்
இவர்கள் மூவர் தவிர தென்னாப்பிரிக்க உள்ளூர் கிரிக்கெட் வீரர் சோலோ நிக்வேனி மற்றும் ஸ்காட்லாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மஜித் ஹக் ஆகியோரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. இவர்களில் அப்ரிடி அனைத்து கிரிக்கெட் ஆடும் நாடுகளிலும் பிரபலமான வீரர்.
முன்னணி வீரர்
ஷாஹித் அப்ரிடி கடந்த 2018இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் பல நாடுகளில் நடக்கும் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வந்தார். அதிவேக சதம் அடித்த சாதனையை நீண்ட நாட்கள் வைத்திருந்த வீரர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர். 27 டெஸ்ட், 398 ஒருநாள் போட்டிகள் மற்றும் 99 டி20 போட்டிகளில் ஆடிய வீரர்.
அதிர்ச்சி
ஷாஹித் அப்ரிடி மோசமாக வலிப்பதாக கூறி உள்ள நிலையில், அவருக்கு அறிகுறிகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. முன்னணி கிரிக்கெட் வீரரான அவர் பாதிக்கப்பட்டு இருப்பது கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது.