நியூசிலாந்து தொடர்
உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியா வரும் நியூசிலாந்து அணி 3 டி20 போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் கோலி, பும்ரா, ஷமி ஆகிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய டி20 அணியில் ரேஹித் சர்மா கேப்டனாகவும், ராகுல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரேஹித் சர்மாவுக்கு முழு நேர கேப்டனாக இது முதல் தொடர் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், ஆர்.அஷ்வின், அக்சர் படேல் , அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது. சிராஜ் ஆகியோர் இந்திய டி20 அணியில் இடம் பிடித்துள்ளனர்
அப்ரிடி பேச்சு
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதை பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி வரவேற்றுள்ளார். ரோஹித் சர்மாவின் மன வலிமை அவரை ஒரு "சிறந்த வீரராக" மாற்றுவதாகத் தெரிவித்த அப்ரிடி, தேவைப்படும் இடத்திற்கு ஏற்ப நிதானமாகவும் ஆக்ரோஷமாகவும் இருக்கும் ஆற்றலைப் பெற்றவர் அவர் என்றும் பாராட்டியுள்ளார்.
சிறப்பான தேர்வு
இது குறித்து பாகிஸ்தானில் உள்ள சாமா செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "ரோஹித் கேப்டனாக பொறுப்பேற்கும் திறன் கொண்டவர் தான். நான் அவருடன் ஒரு வருடம் (டெக்கான் சார்ஜர்ஸில்) விளையாடியுள்ளேன். அவர் அற்புதமான கிரிக்கெட் வீரர். தேவைப்படும் இடங்களில் நிதானமாக இருப்பதோடு, தேவைப்படும்போது ஆக்ரோஷத்தையும் காட்டுகிறார். அவரது இரு வேறு பரிமாணங்களையும் நாம் பார்க்கலாம்" என்று அவர் கூறினார்.
கோலி குறித்து கருத்து
மேலும், விராட் கோலி குறித்தும் அவர் மிக முக்கிய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அப்ரிடி மேலும் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரைக் கோலி அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும். அவர் வீரராக மட்டும் தொடர்ந்து விளையாட வேண்டும். அப்போது தான் அவர் மீதான அழுத்தம் குறையும். இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பது சுலபமான காரியம் இல்லை. வீரராக மட்டும் தொடர்ந்தால் தான் கிரிக்கெட்டையும் பேட்டிங்கையும் அவரால் ரசித்து விளையாட முடியும்" என்று அவர் தெரிவித்தார்,
விராட் கோலி
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் மிக வெற்றிகரமான கேப்டனாக விராட் கோலி உள்ளார். அவரது தலைமையில் இந்திய அணி பல வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வெற்றிகளைக் குவித்துள்ளது. மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த வெற்றி சதவீதங்களைக் கொண்ட கேப்டன்களில் ஒருவராக விராட் கோலி உள்ளார். கேப்டனாக கோலிக்கு கடைசி தொடர் என்பதால் பெரும் எதிர்பார்ப்புடன் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா களமிறங்கியது.
உலகக் கோப்பை
இருப்பினும், இந்திய ரசிகர்களுக்கு மட்டுமின்றி வீரர்களுக்கும் கூட அது மறக்க வேண்டிய ஒரு தொடராக அமைந்துவிட்டது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ஐசிசி தொடர் ஒன்றில் பாகிஸ்தான் அணியிடம் இந்தியா வீழ்வது இதுவே முதல்முறையாகும். அடுத்து நியூசிலாந்து அணியும் இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அடுத்து வந்த போட்டிகளில் வென்ற போதிலும், இந்திய அணியால் அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற முடியவில்லை.