வங்கதேச தொடர்
வங்கதேசத்தின் உள்நாட்டு தொடரான கிரிக்கெட் தொடர் 'தாக்கா ப்ரீமியர் ட்விஷன்' தற்போது நடைபெற்று வருகிறது. இதில், மோஹம்மெதான் ஸ்போர்ட்டிங் கிளப் மற்றும் அபஹானி லிமிட்டட் அணிகளுக்கு இடையே போட்டி ஒன்று நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஷகிப்-அல் ஹசன் தலைமையிலான மோஹம்மெதான் அணி 145 ரன்கள் எடுத்தது.
பிரச்னை என்ன
பிறகு, அபஹானி அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, முஷ்பிகுர் ரஹீமுக்கு சகிப் பந்து வீசினார். அப்போது, ரஹீமுக்கு எல்பிடபிள்யூ அப்பீலை ஷகிப் கேட்க, நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த சகிப் அல் ஹசன், ஸ்டெம்புகளை ஓங்கி உதைத்து தள்ளினார். மேலும் நடுவருடன் கடும் வாக்கு வாதம் செய்தார். அதன் பிறகு, 2வது இன்னிங்ஸின் 6 ஓவரில் திடீரென மழை குறுக்கிட்டது. இதனையடுத்து போட்டியை நிறுத்துவதாக அறிவித்தார். உடனே, பீல்டிங் செய்த இடத்தில் இருந்து வேக வேகமாக வந்த ஷகிப், 3 ஸ்டெம்ப்புகளையும் கையோடு பிடிங்கி, தரையில் வேகமாக தூக்கி எறிந்தார்.
மன்னிப்பு
இந்த பிரச்னை பூதாகரமாக, உஷாரான ஷகிப் பேஸ்புக்கில் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். அதில், வீட்டிலிருந்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எனது செயல்பாட்டால் அதிர்ச்சி அடைந்தீர்கள். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். சில சமயங்களில் இது போன்று துரதிர்ஷ்டவசமாக நடந்து விடுகிறது. இதற்காக அணி நிர்வாகம், போட்டி அதிகாரிகள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனத்தெரிவித்தார்.
கடும் நடவடிக்கை
இந்நிலையில் அவரின் மோசமான செயல்பாட்டிற்காக தாக்கா ப்ரீமியர் தொடரில் அடுத்த 3 போட்டிகளில் விளையாட சகிப் அல் ஹசனுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் அவருக்கு வங்கதேச பண மதிப்பில் 5 லட்சம் அபராதமும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளது. வங்கதேச அணியின் சீனியர் வீரராக இருக்கும் ஒரு வீரருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.