வங்கதேச தொடர்
மோஹம்மெதான் ஸ்போர்ட்டிங் கிளப் மற்றும் அபஹானி லிமிட்டட் அணிகளுக்கு இடையே போட்டி லீக் போட்டி நடைபெற்றது. இதில், அபஹானி அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, முஷ்பிகுர் ரஹீமுக்கு, சகிப் அல் ஹசன் பந்துவீசினார்.
அப்போது, ரஹீமுக்கு எல்பிடபிள்யூ அப்பீலை ஷகிப் கேட்க, நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த சகிப் அல் ஹசன், ஸ்டெம்புகளை ஓங்கி உதைத்து தள்ளினார். மேலும் நடுவருடன் கடும் வாக்கு வாதம் செய்தார்.
பறந்த ஸ்டெம்புகள்
அதன் பிறகு, 2வது இன்னிங்ஸின் 6வது ஓவரில் திடீரென மழை குறுக்கிட்டது. இதனையடுத்து போட்டியை நிறுத்துவதாக அறிவித்தார். உடனே, பீல்டிங் செய்த இடத்தில் இருந்து வேக வேகமாக வந்த ஷகிப், 3 ஸ்டெம்ப்புகளையும் கையோடு பிடிங்கி, தரையில் வேகமாக தூக்கி எறிந்தார். சகிப்பின் இந்த மோசமான செயல்பாட்டால் இணையத்தில் ரசிகர்கள் மோசமாக விமர்சித்து வருகின்றனர்.
வில்லனாக சித்தரிப்பு
இந்நிலையில் சகிப் அல் ஹசனுக்கு ஆதரவாக அவரது மனைவி உம்மே அகமது ஷிஷிர் களமிறங்கியுள்ளார். இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பேசியுள்ள அவர், சகிப்பின் செயல்பாடுகளை தொலைக்காட்சிகள் மோசமாக சித்தரித்திருப்பது வேதனையளிக்கிறது. கள நடுவரின் தவறான முடிவே பிரச்னைக்கு காரணம். ஆனால் சகிப்பை வில்லன் போன்று காண்பித்துள்ளனர். தொலைக்காட்சிகளுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. செய்திகளின் தலைப்புகளை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது.
ரசிகர்கள் ஆதரவு
சகிப் அல் ஹசனுக்கு சிலர் சமூக வலைதளங்களில் ஆதரவு அளித்திருப்பதை பார்த்தேன். அவர்களாவது உண்மையை புரிந்துகொண்டு தைரியமாக குரல் கொடுக்கின்றனர். கிரிக்கெட் ரசிகர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை நன்கு உணர்ந்து செய்யவும். ஏனென்றால் சகிப்பிற்கு எதிராக தொலைக்காட்சிகளில் சித்தரிக்கின்றனர் என உம்மே கூறியுள்ளார்.
கடும் நடவடிக்கை
இதனிடையே சகிப் அல் ஹசன் தனது மோசமான செயல்பாட்டிற்காக ஃபேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பு கோரியிருந்தார். எனினும் அவர் மீது குற்றம் நிரூபனம் ஆனதால் தாக்கா ப்ரீமியர் லீக் தொடரில் அடுத்த 3 போட்டிகளில் விளையாட சகிப் அல் ஹசனுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டு மதிப்பில் 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.